32 லா. ச. ராமாமிருதம்
“ஆமாம். சத்தியமாய்க் கேட்கப் போகிறீர்கள்.”
“சத்தியமா? இதென்ன! புதிது புதிதாய் வார்த்தை நடமாடுகிறது?”
“ஆமாம்!—சத்தியமாய்த்தான்!”
“அது எப்படி யிருக்கும்?”
“இதென்ன, இப்படிக் கேட்கிறளே. இத்தனை நாழி எதைப்பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருந்தேள்?”
“நான் ஒன்றும் பேசவில்லையே.”
“என்மேல் உங்களுக்கு இருக்கும் பிரியத்தை எந்தத் தினுசில் நீங்கள் ஸ்தாபிச்சிண்டிருந்தேள்?”
அவன் சிரிப்பில் அறை எதிரொலித்தது.
“நான் சாவில் என் நிறைவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்?”
“சாவு என்பது உங்கள் பாஷை, சத்தியம் சாதாரணமான என் பாஷை என்று வெச்சுக்கோங்களேன். ரெண்டு பேரும் சொல்லும் விஷயம் ஒண்ணேதான்.”
“வெச்சுக்கோங்களேன், பண்ணிக்கோங்களேன் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் இன்னி முழுக்க என்ன, என்றைக்குமே வைத்துக்கொண்டிருக்கலாம்; எதை வேணுமானாலும் பண்ணிக்கொண்டிருக்கலாம்.”
“அப்படியல்ல இப்போ. இப்போது நிச்சயமாய் ஒன்றைச் செய்யப்போகிறோம்.”
“எதை?”
“நான் இப்போ உங்களுக்குச் சொல்லப்போவதை, செய்யறேன்னு சொல்லுங்கோ—சத்தியமாய்ச் செய்யப் போறேன்"னு.