ஜமதக்னி 57
நானா? இல்லை. ஆனால் உள்ளுக்கும் உள்ளுண்மையான முறையில் நான்தான் அப்படி எரிகிறேன். நான் மாத்திரம் இல்லை. வித்திலிருந்து வித்தாய் இறங்கிவந்து எனக்கு முன்னால் இதேமாதிரி தோன்றி மறைந்த எத்தனையோ நான்கள் திகுதிகுவென்று எரிகின்றன. எத்தனையோ நான்கள் அடங்கிய ஒரே நான் எரிகிறது.”
அவன் இரு கைகளிலும் முகத்தை புதைத்துக்கொண்டு தலையை உதறினான்.
“தான் உண்டாக்கிய நெருப்பில் நான் திருப்பித் திருப்பித் தன்னையே காய்ச்சிக்கொள்கிறது. காயக் காய விடுபடும் அழுக்குகள்தாம் நாம். பாச்சு, ஜமதக்னிநான்—மீனா—நீனா”
“ஹா—!” மாஞ்சி பயங்கரத்துடன் குழந்தைகளை அவன் பார்வையிலிருந்து மறைத்து அணைத்துக் கொண்டாள்.
“நீயும்தான்—”
“நீங்கள் என்ன சொல்றேள்? என்ன சாபமிடறேள்? அப்படிப் பார்க்காதேங்கோ—”
“மாஞ்சி, பார்! இன்றில்லாவிடில், என்றேனும் எத்தனையோ லட்ச நாட்கள் கழித்தாவது ஒருநாள் வரப் போகிறது.”
அவன் அவளையே பார்க்கவில்லை.
“கணப்புச் சட்டியின் நடு மையத்திலிருந்து கடைசியாய் எடுக்கும் தங்க உருண்டைபோல், இந்த மஹா சூளையிலிருந்து ஒரு லட்சிய புருஷன் வெளிப்படப் போகிறான். அந்த ஜோதி ஸ்வரூபம் உருவான பின் இந்தச் சூளைக்கு வேலையில்லை. அப்புறம் காலம்கூட இல்லை. அநித்யமான வாழ்க்கையை நித்யப்படுத்திய