பக்கம்:அடி மனம்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனவு

77


கனவு ஒரு வகையிலே உறக்கத்தைப் பாதுகாக்கின்றது. “நனவு நிலையிலே கைகூடாத பல ஆசைகள் கனவிலே கைகூடி விடுகின்றன; அதனால் மனத்திற்கு ஆறுதல் கிடைக்கிறது. அதனால் ஆழ்ந்த தூக்கமும் ஓய்வும் உண்டாகின்றன; ஆதலால் அந்த வகையிலே கனவு உறக்கத்திற்கு உதவியாக நிற்கின்றது” என்று பிராய்டு சொல்லுகிறார்.

நனவிலி மனத்திலே பல தகாத இச்சைகள் அடக்கப்பட்டுக் கிடக்கின்றன என்பதைப் பற்றி முன்பே அறிந்து கொண்டோம். அந்த இச்சைகள் விழிப்பு நிலையிலே மேலே வந்தால் பெரும்பாலும் மனச்சான்றால் தடுக்கப்பட்டு விடும். வெற்றி பெறாத காரணத்தால் அந்த இச்சைகள் வேறு வழிகளிலே வெளிப்பட்டுத் திருப்தி பெற முயல்கின்றன. அதற்கு உறக்கம் ஒரு நல்ல சாதகமாக அமைகின்றது.

உறக்க நிலையிலும் மனம் வேலை செய்து கொண்டு தானிருக்கிறது. மனச்சான்றும் காவல் சக்திகளும் அப்பொழுதும் வேலை செய்தாலும் அவற்றின் வலிமை சற்று தளர்ந்து போகிறது. உறக்க நிலையிலே அவற்றின் கூர்மை கொஞ்சம் மழுங்கிப் போகிற தென்று சொல்லலாம். ஆதலால் அந்தச் சமயம் பார்த்து அந்த இழிந்த உந்தல்கள் வெளியே வந்து கனவாகத் தோன்றுகின்றன. அப்படித் தோன்றுகிறபோதும் வெளிப்படையாக நின்றால் அதீத அகம் தடைசெய்து விடுமென்று மறைமுகமாக மாறுவேஷம் போட்டுக் கொண்டு தோன்றுகின்றன. கனவிலே வருகின்ற குறியீடுகளுக்கும், விபரீத நிகழ்ச்சிகளுக்கும் இதுவே காரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடி_மனம்.pdf/82&oldid=1005358" இலிருந்து மீள்விக்கப்பட்டது