108
பகிர்ந்து கொடுத்து அவர்களோடு உடனிருந்து மகிழ்ந்து உண்பான். அந்த உணவில் கொழுவிய இறைச்சிப் பகுதிகளையும், எலும்புத் துண்டுகளையும் பொறுக்கி எடுத்து அவற்றை யாம் உண்ணக் கொடுப்பான். அம்பும் வேலும் நிரம்பும் அமர்க்களங்களில் எல்லாம் தான் மட்டும் தனித்துச் செல்வான். உணவு எனில் எங்களைத் துணையாகக் கொள்வான்; போரெனில் துணை வேண்டாது தனித்துச் செல்வான். நரந்த மலரின் நறுமணம் வீசும் தன் கையால் புலவு நாறும் என் தலையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவான். அத்தகைய புரவலன் எங்களைவிட்டு அகன்று விட்டானே” என்று அவன் வாழ்ந்த கதையை ஆழ்ந்த உணர்வோடு எடுத்துக் கூறுவது உள்ளம் உருக்கும் காட்சியாக விளங்குகிறது.
சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாந் தானிற்கும் மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
- புறம். 235
என்று கடந்தகால நிகழச்சிகளைக் கிடந்தவாறு விளக்குகிறார்.
இனி அவன் மறைந்துவிட்டதால் புலவர்களுக்கும் மற்றையோருக்கும் ஏற்படும் இழவு எத்தகையது என்று எடுத்துக் கூறுவது அதைவிட உருக்கமாக அமைந்துள்ளது.
“அவன் மார்பிற் பாய்ந்த வேல் மார்பில் மட்டும் பாய்ந்து அவன் உயிரைச் செகுக்கவில்லை. அஃது இசை பாடும் பாணரின் கைப் பாத்திரத்தினைத் துளைத்து, இரப்போர் கையுள்ளும் பாய்ந்து, அவன் புகழ்பாடும் பாவலரின் நாவில் சென்று வீழ்ந்து” என்று கூறுகின்றார்.