119
இவர் கவிதையில் காணலாம். அப் புதுமையோடன்றி நாட்டுணர்வை நலமுற ஊட்டிய பெருமையும் இவரைச் சாரும்.
அந்நியர் ஆட்சியில் தன்னிலை கெட்டுத் தடுமாறிய நிலையில், மக்களை உரிமைப் போருக்கு ஒருங்கெழத் தூண்டியது இவருடைய கவிதைகளின் தன்னிகரில்லாப் பெருமையாகும். உரிமை வேட்கையை இவர் உணர்த்தியது போல வேறு எவரும் உணர்த்தியிருக்க முடியாது. உரிமை இல்லாவிட்டால் வெறு மாலைகளைச் சுமக்கும் உயிரில்லாப் பிணத்தின் கோத்தைப் போன்றதே மனிதரின் போலிவாழ்வு என்று உணர்த்துகிறார்.
நின்னருள் பெற்றி லாதார் நிகரிலாச் செல்வரேனும்
பன்னரும் கல்விகேள்வி படைத்துயர்ந் திட்டாரேனும்
பின்னரும் எண்ணிலாத பெருமையிற் சிறந்தாரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோ டொப்பார்
என்று உரிமையின் உணர்வை உணர்த்துகிறார். உயிரிருந்தால் தனிமனிதர் வாழ்வு உண்டு; உரிமையிருந்தால் நாட்டு வாழ்வு உண்டு என்ற கருத்தை உணர்வு பொருந்த உணர்த்துகின்றார்.
அந்த உரிமை ஒருசிலருக்கே மட்டும் பயன்படும் உரிமையாக இருக்கக் கூடாது என்பதையும், அந்த உரிமையால் பெறும் பயன் இன்னது என்பதையும்,
ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை சாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே
என்ற விடுதலைப் பாட்டால் உணர்த்துகின்றார்.