பக்கம்:அணியும் மணியும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

என்னும் ஒண்பாவால் சிறப்பித்து அமைத்த பெருமை புகழேந்தியைச் சாரும்.

மற்றைய காவியங்களைப் போலவே, இந்நூலும், காண்டங்கள் என்னும் பிரிவுகளைப் பெறுவதோடு, இன்பமும் துன்பமும் மாறிமாறி வர, இன்ப முடிவைக் கொள்ளும் இன்பியல் காவியம்போல, இன்பத்தில் தொடங்கி இடையறாத் துன்பத்தில் தொடர்ந்து இறுதியில் இன்பத்தில் முடியும் கதையமைப்பைப் பெற்று, இன்பியல் காவியமாக அமைந்திருக்கிறது. பாரதக் கதையின் கிளைக்கதையாக இஃது அமைந்திருப்பினும், கதையமைப்பில் அம் முதற்கதையோடு பெரும்பாலும் ஒத்து விளங்குகிறது. சூதாடி நாடும் பொருளும் இழந்து காடு நோக்கிச் சென்ற பாண்டவர்களைப் போலவே, நாடும் பொருளும் சூதில் இழந்து காடு நோக்கிச் செல்லும் காதலனின் வாழ்வைச் சித்திரிக்கிறது. காரிருளில் காதலியைக் கானகத்தே கைவிட்ட காதலினின் துன்பவாழ்வை நம் கண்முன் அப்படியே நிறுத்தும் ஆற்றலுடையது இஃது எனலாம்.

சொல்லும் திறனறிந்து கல்லும் உருகக் கவிசெய்யும் கவிஞர்கள் கற்பனையில் பறந்து ஒப்பனை மிக்க உவமைகளையும் உருவகங்களையும் எடுத்தாளும்போது, அக்கவிகள் பொன்னினும் ஒளிர்ந்து, மலரினும் மணந்து பண்ணினும் இசைந்து, தேனினும் இனித்து, வானினும் உயர்ந்து வண்புகழ் பெறுகின்றன. புகழேந்தி எதைச்சொன்னாலும் அணிநயம் படவும் கற்பனைத்திறன் மிகவும் சொல்லும் திறனை அவர் ஒண்பாவில் காண்கின்றோம். நாட்டின் நலனைச் சொன்னாலும், அன்னத்தின் மென்னடையைக் கிளர்ந்ததாலும், காதலிருவர் சந்திப்பைச் சித்திரித்தாலும், அந்திநேரத்தை அழகுபடக் கூறினாலும், மெல்லியலாளின் ஒல்கிய நடையைச் சொல்லிச் சிறப்பித்தாலும், மங்கையொருத்தியின் செங்கையைச் சுட்டினாலும், பிரிந்த உள்ளத்தை விளங்கக் காட்டினாலும், பிரிந்தவரைச் சந்தித்த மகிழ்ச்சியைத் தெரிவித்தாலும், எங்கும் அணியழகும் கற்பனைத் திறனும்படச் சொல்லுந் திறனை அவர்பால் கண்கின்றோம்.