பக்கம்:அணியும் மணியும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஆவலுள்ளத்தை அணிபட எடுத்துக் காட்டுகின்றது. கார்காலம் வருவதற்குள் செய்வினை முடித்து வீடுதிரும்பி வருவதாகச் சொன்ன தலைவன் குறித்த காலத்தில் வீடு திரும்பவில்லை. காரோ வந்தது; அவன் தேர்மட்டும் வரவில்லை. அந்த நிலையில் கார்காலத்து முல்லை மலர்கள் பூக்கத் தொடங்கிவிட்டன. முல்லை முகைகளைப் பற்களாகக் கொண்டு கார்காலம் அவள் தனிமையைப் பார்த்துச் சிரிப்பது போல் இருக்கிறது என்று தலைவி கூறுவதாக ஆசிரியர் அமைக்கிறார். வினைமுடித்து வரவேண்டிய தலைவன் வராததால் உலகமே அவளைப் பார்த்துச் சிரிப்பதுபோல இருக்கிறது. இளமை பாராமல் வளம் விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் எவணரோ என ஏங்கும் தலைவியின் நெஞ்சு, முல்லை மலரைப் பார்த்து மகிழாமல், அவை கார்காலம் வந்துவிட்ட செய்தியை அறிவிப்பனவாக உணர்கிறது. முல்லை மலர்ந்தும் அவன் ஒல்லையில் வரவில்லையே என்று அவள் ஏங்குகிறாள்.

இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவனும் வாரார் எவணரோ வெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே

- குறந்தொகை 126

என்று அவள் அன்புடை நெஞ்சம் அவன் வராமையால் அடைந்த கவலையைக் காட்டுகிறது. அந்தக் கவலையை இயற்கை நிகழ்ச்சியான மலரின் மலர்ச்சியோடு தொடர்பு படுத்திச் சொல்வது அணிநயம்பட அமைந்துள்ளது. “முல்லையின் முகை என்னைப் பார்த்து நகைக்கின்றதே” என்று தலைவி சொல்லும் இக்கூற்றில் அவனுக்காக ஏங்கும் அவளுடைய அன்புடை நெஞ்சம் வெளிப்படுகின்றது.

இல்லிருந்து நல்லறம் ஒம்பும் இல்லாளின் இனிய முகத்தைக் காண ஆவலுறும் தலைவனின் அன்புடைய நெஞ்சை