பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அண்ணாவின் ஆறு கதைகள்



“சொன்னதைத்தானே எழுதினேன்” என்று மண்டு முண முணத்தான். தலையில் அடித்துக்கொண்டு ராகவாச்சாரி “நீ இல்லையடா மண்டு. நான் மண்டு. உன்னைக் கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கினேனே என்னைச் சொல்லணும்” என்றார். கொஞ்ச நேரம், யோசனையில் ஆழ்ந்துவிட்டு, “டே ! மண்டு! வா! உன்னை விட்டாலும் வேறு கதி இல்லை எனக்கு. போய் ஜர்னலிஸ்டு லெடர் பேப்பர் எடுத்துவா” என்று கூப்பிட்டுச் சோகம் கப்பிய குரலிலே, ராகவாச்சாரியார் சொன்னார், மௌனமாக, மண்டு எழுதினான்.

ராம பக்தஜன சபா

‘இவ்வூர், ஶ்ரீராம பக்தஜன சபாவின் போஷகராக இருந்து வந்த திவான் பகதூர் தீர்த்தகிரி முதலியார், ஆச்சார விரோதமாக நடந்துவருவதால், ௸ சபா தலைவர் ஸ்ரீமான் ராகவாச்சாரியார் அவர்களுக்கு, மெம்பர்கள் புகார் செய்து கொண்டதன் பேரில், தலைவர் விஷயத்தைப் பரிசீலனை செய்து புகாருக்கு ஆதாரமிருப்பது தெரிய வந்ததால், மேற்படி சபாவின் போஷகர் ஸ்தானத்திலிருந்து, ௸ தீர்த்தகிரி முதலியாரை நீக்கிவிட்டார். அன்னார் மீது சாட்டப்பட்ட பல குற்றச்சாட்டுகளிலே முக்கியமானது, அவர் ஒரு பிராமண விதந்துவிடம் முறை தவறி நடந்து கொண்டிருக்கிறார் என்பதாகும்”

“யாருக்கு மாமா அனுப்ப. தெளிவாகச் சொல்லி விடும்” என்று பயந்து கேட்டான் மண்டு. “இது ஒரு பத்து காபி எடுத்து, மித்திரன், இந்து, விகடன், மணி, போன்ற சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பிவிடு,” என்று உத்தரவிட்டார். மண்டு, அதை நிறைவேற்றினான். பிறகு மீண்டும் பயந்த குரலில் ராகவாச்சாரியாரை “மாமா! கோவிக்காமே இதை மட்டும் சொல்லிவிடும். அந்தப் பிராமண விதந்து யார்?” என்று கேட்டான். “நம்ம கமலிதான்” என்றார் ராகவாச்சாரியார். கமலி, அவருடைய சகதாமிணிக்கு ஒன்றுவிட்ட தங்கை.