பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


இராமலிங்க அடிகளைப்போல சிலர் தலையில் துணி போட்டுக் கொள்வதால் அவரைப்போல புறத்தோற்றத்தைப் பெற்றுக்கொள்வதாகக் கருதுகிறார்கள். புறத்தோற்றத்திலே காட்டுகிற அக்கறையை மனதில் — உள்ளத்தில் — செயலில் நாம் கொண்டுவருகிறோமோ என்றால் உபச்சாரத்திற்காக சரி என்று சொல்லச் சொன்னால் சொல்கிறேன். உண்மையில் அது இல்லை. போன வருஷம் கொடுத்த ரயில் டிக்கட் அளவிலும் — நிறத்திலும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு இந்த வருஷம் போக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதைப்போல நாம் காலத்தை வைத்து கருத்துக்களை கணக்கிட வேண்டும்.

நாம் இன்னமும் நம்மிடத்தில் தரப்பட்ட கருத்துக்களைப் புரிந்துகொள்ள ஒரு தலைமுறை போதுமா என்றால் போதாது கிறிஸ்தவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஒரே ஒரு நூல் பைபிள் இருக்கிறது. முஸ்லிம்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் மதத்திற்கு புனிதமான ஒரே ஒரு நூல் குரான் இருக்கிறது.

இந்த நாட்டில் ஜாதி வந்த காரணம் என்ன? பெருமையோடு சொல்கிறோம் - ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் வள்ளுவர் சொல்லிவிட்டார் என்று ஐரோப்பாவில் போய்ச் சொற்பொழிவாற்றுகிறார்கள். அப்படி அங்கே கூறிய பின் உங்கள் பெயர் என்ன என்றதும் கோதண்டபாணி செட்டியார் என்று சொன்னால் அது எப்படிப் பொருத்தமாகும் என்று கேட்கிறோம்.

நாம் கருத்துக்கள் அற்றுத் தவிக்கவில்லை. இருப்பதில் எதை பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறோம். நம்முடைய எண்ணங்கள் விரிவடைந்து இருக்கின்றன. ஆனால் நல்லதற்கா — கெட்டதற்கா என்று நான் சொல்லவில்லை. அளவு—வகை—வேகம் மூன்றும் அதிகமாக இருந்தும் எதை எதை எதற்காக பயன்படுத்த வேண்டுமென்று அறிந்துகொள்ளவில்லை.