1. இன்பக்கனவு
"பெரிய இடமாம், பெரிய இடம்! அலங்காரமான மாளிகையல்ல அய்யா, ஆடம்பரங்கள் நிரம்பிய இடங்களல்ல, உழைத்து வாழ்கிறானே ஏழைப் பாட்டாளி அவனுடைய இதயம்தான் பெரிய இடம்! பயன் காணாது பாடுபட்டுப் பார் வாழப் பணிபுரிகிறானே விவசாயி, அவனுடைய களங்கமற்ற உள்ளம்தான் பெரிய இடம்”, என்று நண்பர் எம்.ஜி. இராமச்சந்திரன் கூறுகிறபொழுது மக்கள் மத்தியில் எழுந்த அலையோசை போன்ற கையொலி இருக்கிறதே அது, அறிவியக்கத் தோழருடைய உள்ளத்தையெல்லாம் மகிழ்வித்திருக்கும்.
நண்பர் எம். ஜி. ஆர். நடிகமணிகளிலே வீரம், விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புள்ள அறிவியக்கவாதி. வாள் ஏந்தித் திரைப்பட உலகிலே அவர் வந்து விட்டாலே, மக்களின் ஆரவாரத்தைக் கேட்க வேண்டாம் ? அத்தகையவர் ஏழையாகக் கந்தலாடையும் நொந்த உள்ளமும் தாங்கி, இன்பக்கனவு நாடகத்திலே சிந்தை குளிரும் சொற்களைப் பெய்து, நாட்டு மக்களின் நல்லாசியைப் பெற்று வருகிறார்.
நாடக நடிகர்கள், இன்று அவிழ்த்துவிடப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் போல, ஆங்காங்கேச் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி அறிந்த நம் போன்றாேர்க்கு, வீதியில் விழியில் விசாரத்தோடு