பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

 எத்தகைய அறிவாற்றல், என்னென்ன திறனாய்வு இங்கிருந்தன அற்றை நாளில் !

இந்தக் கவிதை எம்மான் இயற்றியது என்று இயம்பிய சொற் கேட்டும், நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே என்றுரைத்த அரிமாப் பெரும் புலவர் நக்கீரர் தெரிகின்றர்.நந்தமிழர் கொண்டிருந்த மாண்பு தெரிகின்றது.

"அச்சம் தவிர்த்திடுக. நவநிதியந் தந்திடினும் நத்திக்கிடந்திட இசையாதீர். வாய்மை தனக் காத்திடும் வன்மைதனைப் பெற்றிடுக". அதற்காக நெருப்பாற்றில் நீந்திடவும் துணிந்திடுக. யாந்தமிழர் என்பதனை மெய்ப் பித்திடுக. என்றன்றே அந்நாள் நிகழ்ச்சி நமக்கெல்லாம் ஆணையிடக் காண்கின்றோம்.

இந்தத் திருநாட்டில் பிறந்திட்ட நாமெல்லாம் ஆன்றோர் அமைத்தளித்த அருமரபுகளைக் காத்தல் நீங்காத நற்கடமை என்பதனை உணர்கின்றோம்.

"ஏறுநடை போட்டிடுக. ஏற்றமிகு நிலையதனை இந்நாடு பெற்றிடவே உமதாற்றல் பயன்படட்டும்"?? என்றெல்லாம் புலவர் பெருமக்கள் கூறி நிற்கின்றார்கள். காண இயலவில்லை, கேட்கின்றோம் அவ்வுரையை.

பாண்டிய நாடிதற்குப் பாங்களித்த மாயதுரை. தமிழ் மரபு காத்திட்ட மன்றங் கண்ட மதுரை. தேமதுரத் தமிழோசை திக்கெல்லாம் எழச்செய்த திருமதுரை. வீரப் போராற்றலால் மட்டுமன்றி, அறிவுக்கணை தொடுத்த மாண்பினையும் பெருமைதனைப் பெற்ற வெற்றிக் கோட்டம்.

"அந்த நாளும் வந்திடாதோ!?" என்னும் உணர்ச்சியால் எவரும் உந்தப்படும் நிலைபெறுவர் மாமதுரைப் பதியின் வரலாற்றுச் சிறப்பறியின்.