பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
48


சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ, சிரம்பான் போன்ற நகரங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன.

சிங்கப்பூரில் ஏற்பாடாகியுள்ள சிறப்பு நிகழ்ச்சிமூலம் பெறப்படும் தொகையினை, சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பிரிவுக்குத் தருவது என்று சீரிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மற்ற நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பெரிதும் வரவேற்பு விழாக்களாகவும், பொதுக் கூட்டங்களாகவும் அமைந்துள்ளன என்று அறிந்து அகமகிழ்கின்றேன்.

மலேசியா வரவேண்டும் என்பதிலே துவக்க முதல் மெத்த ஆர்வம் காட்டி என்னை ஊக்குவித்து வரும் 'தமிழ் மலர்' ஆசிரியர் செல்வகணபதி அவர்களும், அலுவலகத்தில் உள்ள மற்ற நண்பர்களும், அதுபோன்றே நீண்ட பல ஆண்டுகளாக மலேசியாவாழ் தமிழவேள் திரு. சாரங்கபாணி அவர்களும், அவர் நடத்தும் 'தமிழ்முரசு' நாளிதழ் அலுவலகத்தினரும், 'தமிழ்நேசன்' ஆசிரியர் அன்பர் முருகு சுப்பிரமணியமும், அவர்தம் தோழர்களும், தமிழர் பிரதிநிதித்துவ சபையில் ஈடபாடு கொண்ட நண்பர்களும் என்னை உள்ளன்புடன் அழைத்துள்ளனர்; உடனிருந்து மகிழ்ச்சி வழங்கிடுவர்.

வள்ளல் அரங்கசாமி அவர்கள், இராமநாதபுரம் திருப்பத்துார்க் காரர் - அவருடைய அன்பழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளேன்.

மற்றும் பலர், எனக்கு அறிமுகமாகாதவர்கள், ஆயினும் இதயத்தில் எனக்கு இடமளித்துள்ளவர்கள், கடித மூலம் கனிவுடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கண்டு மகிழ்ந்திடவும், உரையாடி உற்சாகம் பெற்றிடவும், உடனிருந்து அளவளாவிடவும், ஒரு திங்கள் முழுவதும் அங்கு இருந்தாலும் போதாது; எனினும், இங்குள்ள அலுவல்களைக் கணக்கிடும் போது பதினைந்து நாட்கள் மட்டுமே மலேசிய நிகழ்ச்சிகளுக்கெனக் குறித்திட முடிகிறது.

மலேசிய அமைச்சர் மதிப்புமிகு திரு. சம்பந்தம் அவர்கள் நான் அங்கு வருவது குறித்துச் சிற்சிலருக்கு ஏற்பட்ட ஐயப் பாட்டினை நீக்கி, நான் அங்கு வருவதனை வரவேற்றிருக்கிறார்கள். அந்த அன்புள்ளம் கொண்டவருடன் அளவளாவி மகிழ்ந்திடும் நல்வாய்ப்பும் பெற்றிட விழைகின்றேன்.