பக்கம்:அண்ணாவின் பொன்மொழிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


கெட்ட வாடையைக் குறைத்துப் பார்த்தோம்; மறைத்துப் பார்த்தோம், போக்கிட முயற்சிக்கவில்லை.

🞸🞸🞸

மதுரம் தரும் பழமாயிற்றே, நமது தோட்டத்திலே கிடைத்ததாயிற்றே. இதிலே நெளிவது புழுவாக இருக்கமுடியாது; பழத்திலே சுவை இருக்கும்; புழு எப்படி இருக்கும் என்று யாராவது வாதாடுவார்களா? பழம் அழுகுவது போல, மலர் கசங்கி மணத்தை இழந்து பிறகு கெட்ட வாடை கொள்வது போல, தழை சருகு ஆவது போல, கட்டடங்கள் கலனாகிக் குப்பை மேடு ஆவது போல, பலப்பல தத்துவங்களும், ஏற்பாடுகளும் காலச்சிறையிலே கிடந்து, கிடந்து கெடுவதும், பல கேடுகளை உற்பத்தி செய்வதும், இயற்கையாக ஏற்படும் ஒரு நிகழ்ச்சி; இதனை உணர மறுப்பது உலகை அறியாதார் போக்கு.

🞸🞸🞸

விதி, ஒரு நோய்; நெடுநாளாக மனித சமுதாயத்தில் இருந்து வருவது. அதன் பிடியும். வேகமும் குறைக்கப்படுவதற்கு மற்ற நாட்டினர் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் அளவையும், திறத்தையும் விடச் சற்று அதிகமான அளவிலும், திறத்திலும் நாம் விதியெனும் நோவைக் குறைக்க அல்ல---வளர்த்திட வேலை செய்து கொண்டிருந்தோம். அதனாலே தான் விதிக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலை, இங்கு மிக மிகக் கவலை தரும் அளவுக்கு இருக்கிறது.

🞸🞸🞸