பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

201


மாறாக 1967.ல், குறிப்பிட்ட ஒருவருக்கு seat தரவேண்டாம் எனக் கேட்டேன்.

அவர் யார்? அண்ணாவின் எதிரொலி என எங்களால் சிறப்பிக்கப் பெற்ற தத்துவமேதை டி. கே. சீனிவாசன் 1962-ல் கும்பகோணம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்; 1967-ல் அதே தொகுதியைத் தனக்குக் கேட்கும் உரிமை அவருக்கே உண்டல்லவா? ஆனால் 1966-ன் இறுதிப் பகுதியில் அவர் உடல்நிலையும், மனநிலையும் குன்றித், தஞ்சையில் வாழ்ந்து வந்தார். அவர் நன்மையில் அக்கறையுடைய நண்பர்களான வழக்கறிஞர் சாமிநாதனும் மாணிக்கவாசகமும் ஒருநாள் அவரை அழைத்து வந்து, மாயூரத்தில் என் வீட்டில் விட்டு, நிலைமையை எடுத்து விளக்கினர். அதாவது அவரே கேட்டாலும் தேர்தலில் அவர் நிற்க அனுமதிக்கூடாது என. அண்ணா மாயூரம் வந்திருந்தார்கள், சீனிவாசனை என் வீட்டில் இருக்க விட்டுத், தனியே அண்ணாவைச் சந்தித்து, விவரங்களைக் கூறினேன். அண்ணாவும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டாமென நாங்கள் முடிவு செய்தோம். யாவுமே டி. கே. சி. யின் நன்மைக்காகத்தான்! அவரைத் தஞ்சைக்கு ரயிலேற்றி அனுப்பிய பின்னர் அண்ணாவை என் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து வந்தேன் இரவு. பின்னர் மாநிலங் களவை உறுப்பினர் பொறுப்பினில் கலைஞர் சீனிவாசனை அமர்த்தியபோது நானே, அதனை ஆதரித்தேன். அப்போது அவர் நலமடைந்து விட்டார்.

நாணயத்தின் இருவேறு பக்கங்களைப் போல அண்ணா வின் நட்பிலும் இருவேறு பக்கங்கள் உள்ளனவே!

அழிவினவை நீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

என்னும் 787-ஆவது திருக்குறள், அண்ணாவின் இப்பேர்ப்பட்ட நட்பினடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு, நல்ல எடுத்துக்காட்டு ஆகுமன்றோ?