பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

29


காரோட்டி, திருச்சி சின்ன பாண்டு (ரங்கன்) திடீரென்று காரை ஓரங்கட்டி நிறுத்தித் தொப்பென்று கீழே குதித்து, நடுச்சாலையில் உட்கார்ந்து, வாந்தி எடுக்க ஆரம்பித்தார். சே! பாண்டு அப்படிப்பட்ட ஆளில்லையே என்ற சந்தேகம் எனக்கு! அண்ணாவும் பதறிப் போனார்கள். “ஒண்ணுமில்லே, புகையிலை வாய்க்குள் போய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே தரையில் படுத்துவிட்டார்.

இரவு இரண்டு மணி. அக்கம்பக்கத்தில் வீடும் இல்லை. போக்குவரத்தும் இல்லை. ஜியாருக்கும் எனக்கும் கார் ஓட்டத் தெரியாது. அண்ணாவுக்குச் சிறிது தெரியும். அவர் ஸ்டிரியங்கில் போய் உட்கார்ந்துவிடப் போகி றாரே என்ற அச்சத்தில், பாண்டுவிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தில் தெளித்து விட்டேன்.

பயத்தைப் போக்கிக் கொள்ள ஏதாவது பேசவேண்டுமே. “மாயூரம் எட்டு மைல்தான் இருக்கிறது. இப்படியே பேசிக்கொண்டே இருட்டில் நடந்து போனால் பொழுது புலர மாயூரம் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றேன் நான். இந்த நகைச்சுவையை யாரும் ரசிப்பதாகத் தெரிய வில்லை. அரைமணி ந்ேரம் திகைப்பினூடே கழிந்தது.

பாண்டு மெல்ல எழுந்து, “மன்னிச்சுக்குங்க அண்ணா. சரியாப் போச்சு” என்று சொல்லிக் காரில் ஏறினார். நாங்களும் நம்பிக்கையுடன் ஏறினோம். பிறகு அசம்பாவிதம் ஏதுமில்லை. மாயூரம் 10 நிமிடத்தில் போய் ஒழுங்காகச் சேர்ந்தோம். சஸ்பென்சாக ‘அன்பே வா’ பார்க்க ஆசைப்பட்டதில் எவ்வளவு இடைஞ்சல்கள் அண்ணாவுக்கு!