பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. அதிகமானும் ஔவையாரும்

த்தகைய சிறந்த குலத்திலே பிறந்தான் நெடு மான் அஞ்சி என்பவன். அதியர் குலத்திலே பிறந்தவனாதலின் அவனுடைய முழுப் பெயர் அதிகமான் நெடுமான் அஞ்சி என்று வழங்கியது. அவ்வளவு நீளமாக வழங்காமல் அஞ்சி என்றும் சொல்வது உண்டு. அதிகமான், அதிகன், அதியன் என்றும் சொல்வார்கள். அதிகர் குலத்தில் தோன்றிய எல்லா மன்னர்களுக்கும் பொதுவான பெயர் அதிகமான் என்பது. ஆனாலும் அதிகமான் என்று அடையின்றிச் சொன்னால் அது நெடுமான் அஞ்சியைத்தான் குறிக்கும். இரகு குலத்தில் தோன்றிய ஒவ்வொரு மன்னனையும் இரகுநாதன் என்று சொல்லலாம். ஆனாலும் இரகுநாதன் என்றால் இராமன்தான் நினைவுக்கு வருகிறான். அவனுடைய இணையற்ற பெருமையே அதற்குக் காரணம். அதிகமான் என்ற பொதுப் பெயரும் அதைப் போலவே அஞ்சிக்கு உரியதாயிற்று. ஈடும் எடுப்பும் இல்லாதபடி பல திறத்திலும் அவன் சிறந்து விளங்கியதே அதற்குக் காரணம்.

தகடூர் என்பது இன்று சேலம் மாவட்டத்தில் தருமபுரி என்ற பெயரோடு நிலவுகிறது. அதற்குத் தெற்கே நான்கு மைல் தூரத்தில் இன்றும் அதிகமான் கோட்டை என்ற இடம் இருக்கிறது. இவை யாவும் சேர்ந்த பெரிய பரப்புள்ள இடமே பழங்காலத்தில் அதிகமான் இருந்து அரசாட்சி நடத்திய தகடூராக விளங்கியது.

அதிகமான் இளம் பருவத்திலேயே அரசாட்சியை மேற்கொண்டான். துடிதுடிப்புள்ள இளமையும் உடல் வன்மையும் உள்ளத்துறுதியும் உடையவனாக அவன் விளங்கினான். தகடூர்க் கோட்டையை விரிவுபடுத்தி