16
பறக்கிற இந்தக் காலத்திலே பத்தாவது படித்த நான் என்ன பண்ணுவதென்றுதான் தெரியவில்லை.
காமா: அதென்னமோப்பா, நான் சொல்லறதைச் சொல்லிட்டேன். இன்னமே நான் இந்தக் கண்றாவிகளெ எல்லாம் பார்க்காமே எங்கேயாச்சும் போயிடப் போறேன். என்னெ நம்பாதே, ஆமாம்.
நடராஜன்: அடாடாடா! இதென்ன பெரிய தொல்லையா இருக்கிறதே.
காமா: என்னடா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன்; நீ போயிக்கிட்டே இருக்கிறீயே!
நடராஜன்: நீ சொல்லிக்கிட்டே இரு நான் போய்கிட்டே இருக்கேன்.
லீலா : ஏம்மா! நீ எப்பொழுது பார்த்தாலும் அண்ணனிடம் இப்படியே சிடுசிடென்று பேசிக் கொண்டிருக்கிறாய். அண்ணன் என்ன சிறு பிள்ளையா? அவருக்கு மட்டும் நம் குடும்பக்கவலை யில்லாமலா இருக்கிறது? அவரும்தான் எவ்வளவோ பிரயாசைப் படுகிறார். என்ன செய்யலாம்? வேலை கிடைத்தால்தானே?
காமா: ஆமாடி ஆமாம், இப்படிக் காலிப்பசங்களோடவே சேர்ந்துக்கிட்டு ஊரைச் சுத்திக்கிட்டே இருந்தா, வேலை தான் வந்து ஐயா கைமேலே கெடைக்கும். மூதேவி, அவங்கூடப் பொறந்தவதானே நீ. அவனுக்கு மேலே பேசமாட்டே போடிபோ, வேலையைப் பாருடி, வாயாடி.