43
நட : ரொம்ப சரி, அப்புறம்?
காமா : லீலா பேராலேயே பத்தாயிரம் ரூபாய் பாங்கிலே போடுறாராம்.
நட : அடடே ஏது லீலாவின் மேல் அவ்வளவு கருணை?
காமா : வேறே ஒன்னுமில்லை. லீலாவை அவரே கலியாணம் செய்துக்கிறேன்னு......
நட : அட போம்மா! சும்மா விளையாடுகிறாயே. அவருடைய அந்தஸ்து என்ன! நிலைமை என்ன! அவர் வந்து நம் வீட்டுப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வாரென்றால், இது நடக்கிற காரியமா என்ன?
பொன் : பார்த்தாயா! பார்த்தாயா காமு! மாப்பிள்ளை இதற்கு ஒன்றும் தடை சொல்லவே மாட்டார் என்று நான் அப்பொழுதே சொல்லவில்லையா?
நட : தடையாவது, பெரிய பிரபு, அதிலும் ஒரு திவான்பகதூர். அப்படியுள்ள தங்களே மைத்துனராக அடைய எந்த மடையனாவது ஆட்சேபிக்க முடியுமா?
காமா : கடவுள் கிருபையினாலே அப்படியே முடிஞ்சுட்டா எல்லாப் பெருமையும் ஒனக்குத்தான்.
நட : ஆமாம். எல்லாப் பெருமையும் எனக்குத்தான். அடடா இனிமேல் எனக்கென்ன குறைவு! இந்திர போகமே இங்கேதான்!
பொன் : சரி மாப்பிள்ளை. இனிமேல் வீணாக நாளைக் கடத்தக் கூடாது முகூர்த்தத்திற்கு ஆகவேண்டிய ஏற்பாடுகளைச் சீக்கிரம் செய்யவேண்டியதுதான்.
நட : ஆஹா அதிலென்ன தடை..... உம். அது சரி இப்பொழுது யார் யார் வந்திருக்கிறீர்கள். நீங்கள் மட்டும்தானா? அல்லது......