பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித் திடுக்கிட்டார்; திகைத்தார்; தவித்தார்; தடுமாறினார். எத்தனை நிட்டூரமாகத் தீர்ப்புக் கொடுத்து விட்டார் மகேஷ்!- ‘நான் பாபுவோட பேச விரும்பல்லேங்க!’ மனம் கலங்க, கண்கள் கலங்கின. இந்நிலையிலே, உயிரைக் குடித்து ஏப்பம்விடக்கூடியதான அந்த அந்திமாலைச் சோக நாடகம்-ஒரே களமும் ஒரே அங்கமும் கொண்டதாக விளங்கிய அந்தத் துயரக்கூத்து அவரது இதயமேடையில் மறுபடி நிழலாடாமல் தப்பமுடியாமலும் போய்விட்டது: கசிந்து உருகிய சுடுநீர்ப்படலம், அந்தச் சோக நாளின் தேதிப்படத்தைக் காண்பிக்கவும் தவறிவிடவில்லை. அடித்து வைக்கப்பட்ட கருங்கற் சிலைமாதிரி. ‘கம்’ மென்று உட்காtந்திருந்த மகேஷின் போக்கு அவரைக் சாறு பிழியவே, “மிஸ்டர் மகேஷ்! எந்தக் கோட்டையைப் பிடிக்க ப்ளான் போடுறீங்க? பிடிச்ச கோட்டை போதாதா?” என்று கேட்டுவிட்டார்.

கப்சிப் !

வெற்றிலைத் தட்டுடன் உள்ளே சென்ற ரஞ்சனி, இரவுச் சாப்பாடுபற்றி விவரம் அறிவதற்காகத் திரும்பி ஒரு நிமிஷம்கூட ஆகியிருக்கவில்லை; சுடர்மணித் தீபமாக அல்லாடித் தள்ளாடினாள்.

“மதியத்திலே நீங்க எங்க பாபு கையிலே என்னவோ பேசவேணும்னு நினைச்சிங்க: ஆனா, இப்போ உங்க மனசான மனசு ஏனோ மாறிப்போச்சு! அது போகட்டும்!-பாபு கிட்டே ரகசியமாக அப்படி என்னதான் பேச நினைச்சீங்களாம்? அதையாச்சும் சொல்லலாமா, மிஸ்டர் மகேஷ்?”

“அது என் சொந்த விஷயம், ரஞ்சித், ஸாரே!” என்று மிக அமர்த்தலாகவும் வெகு கண்டிப்பாகவும் பதில் கூறினார் மகேஷ்!-ரஞ்சனி-ரஞ்சித் குடும்பத்தின் உயிர் நண்பரான மிஸ்டர் மகேஷ்!

129