பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருக்கவேண்டும்; பாபுவாகவே இருக்கட்டும்! தலையை ஒடித்துத் திருப்பினாள் ரஞ்...சனி. அத்தனை வெறுப்பு, ஆத்திரம், விரக்தி!-பாவம், என்ன வந்துவிட்டதாம் இந்த மஹாலக்ஷ்மி ரஞ்சனிக்கு?

“அ...ம்... மா!” என்று கூவி அழைத்து ஓடி வந்து நின்றான் பாபு, அம்மாவை ஒரே வாயில் விழுங்கி ஏப்பம் விட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று கங்கணம் கட்டி கொண்டவன் மாதிரி, அப்படிப் பார்த்தான், பார்வையிட்டான் பாபு! மறு இமைப்பிலே தன் அன்னைத் தெய்வம் இல்லாவிட்டால், அப்பால், இந்தப் பூவுலகம் அசல் காடாகவே மாறி விடாதா என்னும்படியான ஞானோதயம் பெற்றவன் போலே, பார்வையில் ஒரு கனிமை- மல்கோவா மாங்கனியின் கனிவை ஏந்தி அமைதியாகவும் ஆறுதலாகவும் பெருமையாகவும் முந்நூறு நாள் சுமந்தவளை முந்துாறு தடவை ஏற்றிப் போற்றிய பெருமிதத்துடன் அவன் பார்த்தான்; பார்வையிடலானான்.

இப்போது;

ரஞ்சனிக்குப் போன உயிர் திரும்பிற்று. “பாபு, என்னப்பா அப்படிப் பார்க்கிறே?-இப்பத்தான் அம்மாவை முதன் முதலாகப் பார்க்கிறீயா, என்ன? எடுத்த எடுப்பிலே நீ என்னை ஒரு மாதிரியாகப் பார்த்த அந்தப் பார்வையைக் கண்டடியும் என்னோட ஈரல் குலையே நடுங்கிப் போயிடுச்சாக்கும்!” அவள் குரல் கம்மியது; கம்மியில்லாமல் விழிகளில் நீர்முத்துக்கள் திரண்டன.

“சும்மா விளையாட்டுக்காகத்தான் அப்படி முதலிலே பார்த்தேன்; உன்னை ‘டெஸ்ட்’ பண்ணனும்னு தோணுச்ச!: பார்த்தேன்; அவ்வளவுதான். இந்த அல்பக் காரியத்துக்காக நீ கண் கலங்கலாமா, அம்மா?” என்று பதற்றத்தோடு கேட்டான் பாபு.

158