பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

அந்த நாய்க்குட்டி எங்கே?



“பூபாலா. உன்னைப் பார்த்து அப்படி வாலை ஆட்டுதே நாய்க்குட்டி?” என்றாள் அஞ்சலை.

“ஆமாம், அம்மா நான் அது உசிரைக் காப்பாற்றினேன். நன்றி சொல்லுது. நன்றி மறக்கக்கூடாதுன்னு ஒளவைப் பாட்டி சொன்னது இதுக்குக்கூடத் தெரியுதே! பாவம், அது தாயைத்தான் என்னாலே காப்பாற்ற முடியவில்லை. அம்மா, இனி இந்த நாய்க் குட்டியும் என்னோடே இருக்கட்டும்...” என்று பயந்த குரலில் கெஞ்சினான் அவன்.

“என்னா சொன்னே? இந்தத் தெரு நாய்க்குட்டிக்கு யார் படி அளக்கிறதாம்.? உள்ளதுக்கே சாப்பாட்டுக்குத் திண்டாட்டம் போடுகிறோம். போடா, போய் அதைத் தெருவிலே விட்டுவிட்டு வந்துடு!” என்று உத்தரவிட்டாள் அவன் அம்மா.

அப்பொழுது பூபாலனின் தந்தை முருகேசன் வந்தான். தன் புதல்வனை அழைத்து, “தம்பி. நீ அழுகாதே; நான் உன் நாய்க் குட்டியைக் காப்பாத்துறேன். நீ சும்மாயிரு...!” என்று சொன்னான்.

பிறகு முருகேசன் உள்ளே சென்று. “அஞ்சலை. குழந்தையின் மனசை நோகடிக்காதே. நம்ப பையன் என்னவெல்லாமோ பேசறான்; கேட்கிறான். சின்னப்பிள்ளை பேச்சாவே எனக்குத் தோணலை. ஒரு வேளை அவன்கூட பின்னாலே பெரிய மனிதனாக ஆனாலும் ஆகலாம். கல்லுக்குள்ளே இருக்கும் தேரைக்குக் கூட படியளக்கும் சத்தி படைச்சவன் ஆண்டவன். இந்த நாய்க்குட்டியை பகவான் மறந்திடவே மாட்டான். அன்பும் ஆண்டவனும் நமக்குத் துணை இருக்கு: காந்தித் தாத்தா சொல்லித் தந்த உண்மையும் நேர்மையும் நமக்கு நல்ல வாழ்க்கையைத்தரும்” என்றான் முருகேசன். அவன் கண்களில் கண்ணிர் இருந்தது.

“அப்பா நல்லவருதான். அம்மாவுக்குத்தான் ஜீவகாருண்யம்னா என்னான்னு புரியவே மாட்டங்குது..!” என்று கூறிய பூபாலன் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவிக் குதித்தான்.