16
அந்த நாய்க்குட்டி எங்கே?
பெற்றோரை வழியனுப்பி வைக்க ஸ்டுடியோவுக்கு வெளியே வந்தான் பூபாலன்.
அப்பொழுது ஸ்டுடியோ வாசலில் ஒரு கார் வந்து நின்றது. காரில் தன் பெற்றோர் ஏறிக் கொண்டதைக் கண்ட பூபாலன் வியப்பிற்குள்ளானான். அவனது வியப்பு அடங்குவதற்குள், அவனையும் கையைப் பிடித்து காருக்குள் அமர்த்திக் கொண்டான் அவனுடைய அப்பா.
பூபாலனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. திரும்பிப் பார்த்தான். முன் ஆசனத்தில் அந்த, சர்க்கஸ் முதலாளி சுகுமார் விஷமப் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார்!
‘ஹ...ஹ்....ஹா!’
ஜப்பானில்தானே ப்யூஜியாமா போன்ற எரிமலைகள் அதிகம் என்று புத்தகங்கள் பேசுகின்றன? இங்கே தண்டையார் பேட்டையில் எரிமலை எங்கிருந்து இப்படி வெடித்துச் சீறுகிறது; ஓங்காரச் சிரிப்புச் சிரிக்கிறது..?
பூபாலன் இப்படி எண்ணினான். இடது கையைத் தலைக்கு அணை கொடுத்து வெளித் திண்ணையில் படுத்திருந்தவன், வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தான்.
“தம்பி!”
‘எனக்கு அண்ணன் இல்லையே, யாருக்கு என்னைத் தம்பி என்று கூப்பிட உரிமையிருக்குது’.
“தம்பி!....ஹஹ்ஹா!”
“நன்றாகச் சிரிக்கிறீங்க! பாவம், நீங்கள் சினிமாவிலே சிரிக்கக் கற்றுக் கொடுக்கவென்று இருக்க வேண்டியவர்.