பூவை எஸ். ஆறுமுகம்
21
அதே நிமிஷம் பூபாலனுடைய நாய்க்குட்டி அங்கு வந்து நின்றது.
“ஐயா, ஆத்திரத்திலே வயசையும் வார்த்தையையும் மீறி என்னென்னமோ பேசிப்பிட்டேன். மன்னிப்பீங்களா? என்னோட நாய்க்குட்டி கிடைச்சப்புறம் இனி எனக்கு எந்தக் கவலையுமே இல்லை. உங்க ‘நன்றிக் கடனை’ அடைக்க வேண்டியது என் பொறுப்பாச்சே... சினிமாவிலே அந்த சுதாகர் மாதிரி நடிக்க ஆசை கொண்டேன். இப்போ என்னடான்னா சர்க்கஸ் மாஸ்டர் ஆகிறதுக்கு யோகம் வந்திருக்குது!ம்.. இப்பவே எனக்கு சர்க்கஸ் ஆட்டத்தைக் கற்றுத் தர ஆரம்பிச்சிடுறீங்களா” என்று பூபாலன் மகிழ்ச்சி கரை புரளக் கூறினான்.
“ஒகே!” என்று சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்தார் சுகுமார்.
சுகுமார் சர்க்கஸ் கம்பெனியில் மாட்டப்பட்டிருந்த காலண்டரில் இரண்டு மாதத்திய தினசரித் தாள்களைக் கால தேவன் திருடிச் சென்றுவிட்டானாம்!
அன்று சர்க்கஸ் கொட்டகையில் எள் விழுவதற்குக் கூட இடம் இல்லாதபடி கூட்டம் கூடியிருந்தது. மாஸ்டர் பூபாலன் புதிதாக அரங்கேறி, ஊசலாடிக் கொண்டிருக்கும் கம்பி வளையத்தில் நின்று விளையாடும் காட்சிகளைப் பற்றிய விளம்பரங்களெல்லாம் பலன் பெறாமல் போய்விடுமா என்ன?
ஆயிற்று, கோமாளி வந்து கூத்தடித்துச் சென்றான். அடுத்தவன் வந்து கரணம் போட்டுச் சென்றான். மூன்றாமவள் அல்லி, வந்து ‘ஜிப்பி டான்ஸ்’ ஆடிச் சென்றாள்.