178
அனிச்ச மலர்
படப்பிடிப்பு என்ற பெயரில் தன்னை ஏமாற்றி எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களும், பிற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 'ப்ளூ' பிலிம்களும் அதில் இருந்தது. லிஸ்ட் செய்யப்படாத நம்பரையுடைய அந்த டெலிபோனில் திடீரென்று மணி அடிக்கவே அதைத் தான் அப்போது எடுத்துப் பேசுவதா விட்டுவிடுவதா என்று சுமதி தயங்கினாள். யார் எதற்காக அப்போது அங்கே ஃபோன் பண்ணுகிறார்கள் என்று அறிய ஆவலாகவும் இருந்தது. சிறிது நேரத்து மனப் போராட்டத்தின் பின் ஆவல்தான் வென்றது.
டெலிஃபோனை எடுத்தாள். "நான்தான் கோயம்புத்தூர் மில் ஒனர் ஆர்.எம்.ஜி. பேசறேன். உடனே அங்கே வரட்டுமா ?”
சுமதி முதலில் பதில் சொல்லத் தயங்கினாள். அப்புறம் துணிந்து பதில் சொன்னாள்.
"கன்னையா இல்லீங்க... நான் சுமதி பேசறேன்."
“எனக்குக் கன்னையா ஒண்ணும் வேணாம். நீதான்ம்மா வேணும். நீதானே அன்னிக்குத் தரணி ஸ்டுடியோவிலே 'காபரே' ஆடினே? உனக்காகத்தான் நான் கன்னையாவுக்கே ஃபோன் பண்ணினேன்? நீயே பேசிட்டே. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி. இதோ நான் இப்பவே வர்ரேன். என்னோட கார்லே 'மியூசிகல் ஹார்ன்' பொருத்தியிருக்கேன். உங்க வீட்டு வாசல்லே வந்து ஹார்ன் கொடுத்ததுமே நீ தெரிஞ்சிக்கலாம்.”
சுமதி அவருக்குப் பதில் சொல்வதற்கு முன் அவர் ஃபோனை வைத்துவிட்டார். கன்னையாவின் ரகசிய அறையும் ப்ளூ பிலிம்களும் லிஸ்ட் செய்யப்படாத ஃபோன் நம்பரும் எதற்கு என்று இப்போது சுமதிக்கு மெல்ல மெல்லப் புரிந்தன. உண்மைகள் பட்டவர்த் தனமாகத் தெரிந்தன.