இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
59
தோலும் தொழிலும்
ஒருவரை கறுப்பு அல்லது சிவப்பு என்று பிறருக்குக் காட்டுகின்ற தோலின் நிறம் மட்டும் ஒருவருக்குப் பெருமையைத் தராது. அவரவரது தொழிலின் திறம்தான் பெருமையைத் தரும்.
Ο O O
மனிதத்தனம்
சோறு போட்ட எஜமானன், தன்னை எத்தனை முறை அடித்தாலும் நாய் கடிப்பதில்லை. எதிர்த்துப் பாய்வதில்லை. வாலை சுருட்டிக் கொண்டு அடங்கிக் கிடக்கும். பிறகு வாலை ஆட்டிக் கொண்டு அன்பொழுகப் பின் தொடரும். ஆனால் சோறு போட்ட எஜமானனை சோறுதின்ற மனிதன் என்னென்ன பேசுகிறான் என்னென்ன செய்கிறான், இப்படி அறிவிருந்தும் யோசிக்காமல் அடாது செய்வதால்தான், மனிதன் கவலைகள் நெருக்க வாழ்ந்து கொண்டிருக்கிறான். மனிதன் படும் வேதனைகள் அவன் செயலுக்கு கிடைக்கும் தண்டனைகள். தான் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டே தவறுகளை மீண்டும் செய்கிறானே அதுதான் மனிதத்தனம் - அவனை மாற்றவே முடியாது!
Ο O O