அன்னக்கிளி
71
கொண்டிருக்கும் அமுதவல்லி உன்னைத் தேடப்போவதில்லை. நீ ஏன் பறக்கிறாய்?’ என்றான் அவன்.
'அன்னம், உண்மையைச் சொல்கிறேன். உன்மீது எனக்கு வெகு நாட்களாகவே ஆசை. நான் உன்னத் திருமணம் செய்து என் துணைவி ஆக்கிக் கொள்ளவே துடிக்கிறேன்...'
'எனக்கு மனம் இல்லாதபோது நீ ஏன் என்னை வற்புறுத்துகிறாயோ, எனக்குப் புரியவில்லையே!' என்று அழாத குறையாகப் புலம்பினாள் அன்னக்கிளி.
'உனக்கு என்மீது ஆசை இல்லை என்பதை நான் அறிவேன், அன்னம். ஆனாலும், என் ஆசையைத் தூண்டிவிட்ட இன்பக் கிளியே, நான் உன் உள்ளத்திலும் ஆசையை வளர்த்துவிட முடியும். இந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இரண்டு பேரும் பாண்டி நாட்டில்தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. கட்டற்றவர்களாக எங்கும் சுற்றித் திரியலாம்..." -
'எனக்குச் சம்மதமில்லை. என்னை விட்டுவிடு!' என்று அலறினாள் அன்னம்.
'இம்முறை என்னிடமிருந்து எளிதில் தப்பி ஓட முடியும் என்று மனப்பால் குடிக்காதே, பெண்ணே?’ எனச் சொல்லி, வெறிச் சிரிப்பை ஒலி பரப்பினான் ஆந்தை.
அப்பொழுது ஆந்தையின் அகன்ற முதுகில் பலமான அறை ஒன்று விழுந்தது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.