65
அன்பு மாலை
நாட்டில் நகரில் மனிதரெலாம்
நண்ணி வணங்கித் துதிக்கின்றார்;
ஆட்டம் ஓய மனம்சிறக்க
அவன்பால் வந்து சாருமினே.
குழந்தை போலச் சிரிக்கின்றான்;
கோலா கலமாய் நடிக்கின்றான்;
தொழுந்தெய் வம்போல் தூயனெனத்
தோற்றம் தன்னில் இருக்கின்றான்;
செழுமெய்ஞ் ஞானத் திருவுருவாய்த்
திருவா ரருணை உறைகின்றான்;
தொழுங்கை யோர்கள் தமக்கன்பன்,
தூய ராம சுரத்குமார்.
வேதம் அறியோம், ஆகமங்கள்
விளங்க அறியோம், நூலறியோம்,
போதம் அறியோம், ஞான நெறி
புகுத அறியோம் என்பார்கள்;
நாதன் ராம சுரத்குமார்
நளின அடியைச் சேர்ந்துவிட்டால்
சீத அருளைப் பெறுவார்கள்;
சினம்போய் மோன நிலைபெறுவார்.
(தரவு கொச்சகக் கலிப்பா)
ஆங்கார மதையடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்தே
பாங்காரும் மோனநிலை படர்வதற்கே எண்ணினிரேல்
தேங்கார்வ முடன்அருணை சேர்கிற்பீர்; அவ்விடத்தே
யாங்காணும் ராமசுரத் குமார்தன்னை எய்துவிரே.
ஞானத்தால் தவத்தாலே நாடரிய முயற்சியெலாம்
கானத்தால் கண்டிடலாம், கவினுறலாம் என்பானால்,
ஈனத்தே நெஞ்சுபுகா இயல்பினான் அருணையினில்,
கோனுற்றான் ராமசுரத் குமாரென்னும் யோகியே.