பக்கம்:அபிதா.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112 O லா. ச. ராமாமிருதம்


அபிதா சிற்பமாய் நின்றாள். அவளுக்கு நா எழவில்லை. தவழ்ந்து செல்லும் மேகத்தின் நிழல் போல், திகிலின் அழகு அவள்மேல் ஸல்லா படர்ந்தது. நெற்றிப் பொட்டில், மோவாய்ப் பிளவில், நெஞ்சுத் தழைவில், கழுத்தின் வெண்மையில் தெரியும் பச்சை நரம்பில், ரவிக்கைக்கு வெளியே தோள் எலும்புக் குழியில், மார்த்துணி கீழ் ரவிக்கை முடிச்சுள் இறங்கி மறைந்த மார்பின் பிரிவில்......

எனக்கு நெஞ்சு வரள்கிறது. யாரேனும் ஒரு முழுங்கு தீர்த்தம் தந்தால் தேவலை.

கூடவே ஒரு ஆச்சரியம். கரடிமலையில், பூமியின் இந்தக் கண்காணா மூலையில் இவ்வளவு அழகா? சிருஷ்டியின் விருதாவான செலவுக்கு வேறு சான்று என்ன வேண்டும்? பயனற்ற அழகு. திருவேலநாதனின் திருவிளையாடல் விசேஷம். இப்போ அபிதாவைப் பார்க்கையில் மனுஷியாகவே தோன்றவில்லை, எங்கிருந்தோ வழிதப்பி வந்து மருண்ட பிராணி.

நல்லவேளை, சாவித்ரி அவள் உதவிக்கு வந்து விட்டாள்.

“நமக்கென்ன மாமி, விரல் நறுக்குப் போறாதா? சிறிசுகளுக்குச் சூட்டிப் பார்ப்பதுதானே நமக்கு சந்தோஷம்!”

தர்க்கம் மேலே தொடர வழியிலாது, பட்டாசுக் கடை பற்றிக் கொண்டதுபோல் “பட்பட் படார்-” சத்தம் கேட்டு எல்லோரும் வாசலுக்கு ஓடினர். நான் சாவகாசமாய்ப் பின் வந்தேன்.

மாமியின் தம்பி மோட்டார் சைகிளின் மேல் வீற்றிருந்தான். அந்த நாளில் ரஜபுத்ர வீரன் இதுபோல், சண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/118&oldid=1130651" இலிருந்து மீள்விக்கப்பட்டது