பக்கம்:அபிதா.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 71

காகவா சாப்பிடுகிறோம்? சமைத்ததற்காகவா சாப்பிடுறோம்?

வாசற் கதவை யாரோ படபடவெனத் தட்டுகிறார்கள்.

அபிதா போய்க் கதவைத் திறக்கிறாள்.

“வாங்கோ மாமி...”

சாவித்ரி கூடத்துள் வருகிறாள். அவளுடன் வந்த துணை ரேழியிலேயே தயங்கி நிற்கிறான். என் மாமாவின் பல பேரன்களில் ஒருவன்.

சாவித்ரிக்குக் கோபத்தில் கண்கள் கடுக்கின்றன.

“எங்கே போறேள்னு ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா? இங்கே வந்தேள்னு கண்டேனா? வயல் காட்டில் பாம்பு பூச்சி பிடுங்கியெடுத்து விழுந்து கிடக்கேள்னு கண்டேனா உங்கள் ஊருக்கு வந்ததுக்குக் கைமேல் பலனா? உங்களை எங்கேன்னு போய் தேடறது?”

கையும் களவுமாய்ப் பிடிபட்ட மாதிரி நான் ஈரம் காயும் கையுடன் இலையெதிரில் உட்கார்ந்திருக்கிறேன். இலையில் சாதம் குவிந்து சத்தியமாய் வெண்மை துலங்குகிறது.

அபிதா மிரண்டு நிற்கிறாள். சாவித்ரியின் கோபம் அவளுக்குப் பயமாயிருக்கிறது.

சாவித்ரியின் கோபம் எனக்குப் புரிகிறது. அவள் சொல்லும் நியாயம் புரிகிறது. ஆனால் சாவித்ரியைத்தான் புரியவில்லை. சக்கு எழுதிவிட்டுப் போயிருக்கும் சித்திரத்தின் பக்கத்தில் அதன் கேலிபோல் நிற்கும் இந்தத் தடித்த உருவம் யார்?

விளக்குச் சுடர் கூடத்துச் சுவர்களில் வீசிய எங்கள் நிழல்கள் பெரிதாய், ஒன்றையொன்று ஊமைப் பயமுறுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/77&oldid=1130506" இலிருந்து மீள்விக்கப்பட்டது