பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தியானந்தம்

அம்பிகையை வழிபடுவதற்கென்று பலவகை நியதிகள் உண்டு. அவளுடைய பூஜையின் விரிவை வேறு எந்த மூர்த்தியினிடத்திலும் பார்க்க வொண்ணாது, தந்திரங்கள் பலவும் எம்பிராட்டியின் பூஜாவிதானங்களைப் பரக்கப் பேசுகின்றன. முறைப்படி தீட்சையும் உபதேசமும் பெற்றவர்கள் அம்பிகையின் உபாசனையில் ஈடுபட்டு விதிப்படி பூஜை செய்வார்கள். இடம், காலம் முதலிய வறையறைகள் அத்தகைய வழிபாட்டுக்கு உண்டு.

ஆகையால் அம்பிகையை உபாசனை செய்ய அஞ்சுபவர்கள் பலர் தவறு நேர்ந்தால் பெருந்தீங்கு உண்டாகிவிடும் என்ற வியாஜத்தால் அன்னையின் பெருங்கருணையைப் பெற முடியாதபடி நிற்பவர்கள் பலர்.

உண்மை அது அன்று. குழந்தைச் செய்யும் குற்றங்களை மன்னிப்பதில் தாயை விடச் சிறந்தவர் ஆரும் இல்லை, புத்திரர்களில் தீயவர்கள் உண்டேயன்றி அன்னைமாரில் தீயவர் யாரும் இல்லை. கொடிய இயல்புகளுடைய பெண்களும் தம் சொந்தக் குழந்தைகளைப் பொருத்தவரையில் நல்லவர்களாகவே இருப்பார்கள். அப்படி இருக்க, லோக ஜனனியாகிய எம்பிராட்டி வழிபடுவதற்கு அரியவள் என்று எண்ணுவது தவறு.

துர்கை, காளி காளி முதலிய உருவங்களில் அன்னை அச்சம் தரும் கோலமுடையவளாக இருக்கிறாளே என்று தோன்றும். அவை தீய சக்திகளாகிய அசுரகணத்தை