பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
97

முத்தியானந்தம்

இவ்வாறு திரிகரணங்களையும் எப்போதும் அம்பிகையின்பால் ஈடுபடுத்திய ஆசிரியர் பாட்டின் பிற்பகுதியைத் தேவியின் பெருமைகளைச் சொல்லி விளித்து நிறைவேற்றுகிறார்.

நின்றும் இருந்தும கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள்.

அம்பிகையின் பெருமையைப் பெரியவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். அவர்கள் தம்முடைய ஆசிரியர்களின் வாயிலாக அவள் பெருமையை உணர்ந்தவர்கள். அந்த ஆசிரியர்களோ தங்கள் குருநாதர்களிடம் தெரிந்து கொண்டவர்கள். இப்படி ஆராய்ந்து கொண்டே போனால் முடிவில் வேதத்தினிடம் வருவோம். அநாதி காலமாக நித்தியமான உண்மைகளை உணர்த்துவது வேதம். அதிலிருந்தே எல்லா நூல்களும் பிறந்தன, அந்த வேதம் தன்னுடைய பரம தாத்பர்யமாகத் தேவியைச் சொல்கிறது.

வேதத்தின் சாரமாக, உள்ளுரை பொருளாக இருப்பவள் பராசக்தி. இதை முதலில் சொல்கிறார்.

எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே!

மறையை எழுதா மறை என்றார். மறை என்பதற்கு மறைக்கப்படும் பொருள், இரகசியம், மந்திரம், வேதம் என்று பல பொருள் உண்டு. வேதத்துக்கு வடமொழியில் சுருதி என்றும், தமிழில் கேள்வி என்றும் பெயர் உண்டு. எழுதிப் படித்துத் தெரிந்துகொள்வது அன்று அது. சுவர அமைப்புக்கள் பிறழாமல் ஆசிரியன் ஓதுவிக்கக் காதினால் கேட்டு மாணாக்கன் பலகாலும் ஓதிப் பயில்வது. காது வழியே கேட்டுப் பயிற்சி பெற்று வழங்குவதனால் தான் அதற்குச் சுருதி, கேள்வி என்ற பெயர்கள்

எழில்-7