பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110
அபிராமி அந்தாதி

இப்படி உள்ள பெருமாட்டியை நமக்கு வேதம் சொல்லிக் கொடுக்கிறது. "எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே" என்று சென்ற பாட்டில் வந்ததைப் பார்த்தோம், வேதங்களில் ஞானபாகமாக இருப்பவை அவற்றின் சிரசாகிய உபநிடதங்கள். அங்கே எம்பெருமாட்டியின் திருவடி நிலை கொண்டிருக்கிறது. நான்கு வேதங்களின் முடிவாக அந்தச் சரணாரவிந்தம் விளங்குகிறது.

மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரணாரவிந்தம்.

அம்பிகையின் திருவடி மறையின் முடியிலே இருப்பது என்று சொன்ன அபிராமிபட்டர். வேறு ஒரு செய்தியைச் சொல்லிப் பாட்டை முடிக்கிறார். சிவபெருமான் தம் திருமுடியின்கண்ணே அந்தத் தாமரையைச் சூடுகிறாராம், முடியில் செருகும் மாலையைக் கண்ணி என்பர். எம்பிரானுடைய முடியில் எம்பிராட்டியின் சரணாரவிந்தம் கண்ணியைப்போல் விளங்குகிறதாம்.

எம்பிரான் எத்தகையவர்: அவர் மயானத்தில் ஆடுகிறவர். எல்லாம் படுசூரணமாகி எங்கும் சாம்பல் நிரம்பி வெண்ணிறம் பெற்ற காடாகிய சுடலையில் ஆடுகிறவர் அவர். அந்த வெண்ணிறக் கானத்தைத் தாம் நடனம் ஆடும் அரங்காகக் கொண்டவர் அவர். எல்லாம் நீறாகி அந்த வெள்ளிய சூழ்நிலையில் ஆடும் நடனத்தைப் பாண்டரங்க நடனம் என்பர், உலகம் எல்லாம் அழியினும் தாம் அழியாமல் நிற்பவர் என்பதை அந்த ஆடல் காட்டுகிறது.

அத்தகைய பெருமான் இறைவியை வணங்குகிறார். ஊடற்காலத்தில் மனைவியைக் காதலன் வணங்குவதாகச் சொல்வது மரபு. அந்த வகையில் இங்கே அம்பிகையைத் தனியிடத்தில் சிவபெருமான் வணங்குவதை எண்ணிச் சொல்கிறார்.