பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அபிராமி அந்தாதி



தரிசனம் செய்யச் செய்தாயே! அதனை என்றும் காணத் திருவருள் செய்ய மாட்டாயா?” என்று திருமகள் ஏங்கி நிற்கிறாள். தான் கண்ட மின்னற் கொடியனைய திருவுருவத்தைத் துதித்துக் கொண்டே இருக்கிறாள்.

இப்படி ஒரு கற்பனைக் காட்சியை அபிராமிபட்டர் கண்டார். திருமகள் துதிக்கின்ற மின்னுக் கொடி போன்றவள் என்ற எண்ணம் வரவே.

மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி

என்று பாடினார்.

★ ★ ★

இதனாலும் அவர் நிறைவு பெறவில்லை. அம்பிகையின் உருவத்தை நன்றாகத் தியானித்தார். அவள் திருமேனிக்குக் காச்மீரத்துக் குங்குமப்பூவை உவமையாகச் சொல்லுவது வழக்கம். மூககவி ஆர்யாசதகத்தில். "காச்மீரஸ்தபக கோமலாங்கலதா" என்று பாடியிருக்கிறாரே. அதை நினைக்கிறார் அபிராமிபட்டர். அதற்கு மேலும் அவர் உள்ளம் விரிகிறது. இந்தக் குங்குமப் பூவைக் கடாரத்தில் பூரித்த தீர்த்தத்தில் நிறைய கொட்டி அம்பிகைக்கு அபிஷேகம் செய்வார்கள். அந்த நீர் சிவப்பாக இருக்கும். அம்பிகையின் திருமேனி முழுவதையும் ஆட்டும் வண்ண நீர் அது. மனத்தில் குங்குமதோயத்தால் அம்பிகையை ஆட்டினார். ஆt அம்பிகை திருமேனி வண்ணமும் இந்தக் குங்கும வண்ண நீர் நிறமும் வேறுபாடு தெரியாமல் இருக்கின்றனவே! அம்பிகையின் திருமேனி முழுவதுமே பரவி நனைத்து அழகு பெற்று ஒளிர்கிறது இந்த நீர். இப்போது உபமான உபமேயங்கள் அருகருகே இருக்கின்றன. அவள் திரு மேனியும் அத்திருமேனி முழுவதும் பரந்து படிந்த குங்கும தோயமும் ஒன்றற்கு ஒன்று இணைந்ததாக உள்ளன. இதுதான் சரியான உவமை என்று தோன்றுகிறது.