பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிபுர சுந்தரி

31

"நீ காப்பாற்றினாயே, உனக்கு நன்றி" என்று பாராட்டுவதையோ அவள் எதிர்ப்பார்ப்பதில்லை. அவள் கருணை அவ்யாஜமானது; எதனையும் நோக்காதது.

இந்தத் தயை உலகில் தாயிடம் இருக்கிறது. அவள் தன் இளங்குழந்தை, "பால் தா" என்று கேட்டு ஊட்டுவதில்லை. குழந்தைக்குக் கேட்கத் தெரியாது. குழந்தை பெரியவனானால் தன்னைக் காப்பாற்றுவான் என்று எதிர் பார்த்தும் ஊட்டுவதில்லை. எதையும் எதிர் பாராமல் நலம் செய்வது தாயன்பு.

ஒருகால் தன் பிள்ளை தன்னைப் புறக்கணித்தாலும் அதனை எண்ணாமல் அவன் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பது தாய்க்கு இயல்பு. "பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு" என்று ஒரு பழமொழி வழங்குகிறதல்லவா?

அம்பிகையும் நாம் அவளை எண்ணாமல் புறக்கணித்தாலும் நமக்கு வேண்டியவற்றை அருள்வதை நிறுத்துவதில்லை. "கடவுளே இல்லை; இருந்தால் என் தலையில் இடி விழச் செய்யட்டும்" என்று ஒருவன் சொன்னால், அதற்காக அவனிடம் சினம் கொள்வதில்லை. அவனையும் அவள் காப்பாற்றுகிறாள். இது சிறந்த தாய்ப்பண்பு அல்லவா?

தாயின் உருவம் தயை. தயையின் பிழம்பு தாய். "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்று மணி வாசகர் தாயைத் தயைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்வார். எல்லாத் தாய்களையும்விடப் பெரிய தாய் அம்பிகை அன்னை, அம்மை, அம்பா, அம்பிகை என்று சொன்னால் உலகத்து அன்னைகளைச் சார்வதில்லை. அடையின்றிச்