பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82

அபிராமி அந்தாதி

     சிந்துர வண்ணத்தினாள்

என்கிறார். திரிபுரசுந்தரி செய்ய திருமேனியுடையவள் என்பதை முதற் பாட்டிலேயே நினைப்பூட்டிக்கொண்டு புக்கவர் அல்லவா?

என் பாசத்தொடரை அரிந்தவள் என்று சொல்கிறாரே, இந்த அருள் அவரளவிலே நின்ற தனியுரிமையோ? என்ற ஐயம் எழும்.அதைப் போக்குபவரைப்போல உலகம் அறிந்த அவள் பராக்கிரமச் செயலைச் சொல்ல வருகிறார்.'மகிஷாசுரனது தலையின்மேல் திருவடியை வைத்து நிற்கும் அந்தரி' என்று கூறுகிறார். எம்பெருமாட்டி மகிஷாசுர மர்த்தனி; தாமத குணத்தின் அடையாளமான எருமையுருப் பெற்ற அசுரனை மாய்த்த துர்க்கை அவள். பசுக்களை அஞ்ஞானக் குழியில் அழுத்தச் செய்வது தாமத குணம்; அதனை மாய்க்கும் அருளுடையாள் அன்னை என்பதே மகிஷாசுர சங்காரக் கதையின் கருத்து. என் பாசத்தை நீக்குவது மட்டுமன்று: உலகத்தில் எல்லா ஜீவர்களுடைய அறியாமையையும் போக்கும் பெருமாட்டி அவள். மகிஷாசுர சங்காரத்தின் கருத்து அதுதானே? என்று குறிப்பாகச் சொல்பவரைப்போல,

என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள்,
மகிடன் தலைமேல் அந்தரி

என்று இரண்டையும் அடுத்தடுத்து வைத்தார்.

மகிடன் தலைமேல் நின்ற கோலத்தில் அம்பிகை துர்க்கை என்றும் சாமுண்டி என்றும் வழங்கப்பெறுவாள்.

     "ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
     கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்"