பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56

புலியார் நின்றுகொண்டிருந்தார். பாராங்கல்லாலான இருக்கைகளில் அமைச்சர்கள் வீற்றிருந்தார்கள். திருநீறு பூசிய நெற்றியுடன் அமைச்சர் வேலனார் என்று சிறப்புப் பெயர் பெற்ற யானையாரும், பரிப்பெருமாள் என்று பெயர் பெற்ற குதிரையாரும், சாணக்கியனார் என்ற பெயருள்ள நரியாரும், தந்தியார் என்ற பெயர் உள்ள காட்டெருதும், அமைச்சர்களாக வீற்றிருக்க, வேட்டைநாய்கள், காட்டெருமைகள் ஆகிய படைவீரர்கள் சூழ்ந்திருக்க அந்த அரசாங்கம் கூடியிருந்தது.

காட்டுவிலங்குகளின் பாதுகாப்பு, குடியுரிமை, உணவு விதிகள் போன்ற பல இன்றியமையாத சட்டங்கள் பற்றி அங்கு ஆய்வு செய்யப்பட்டது.

சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதர் மறைவில் இருந்து ஒரு சின்ன முயல் இந்த அரசவை நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தது. அங்கு வீற்றிருந்த அமைச்சர்களின் பெருமிதமான தோற்றமும் அவர்கள் கணீரென்று பேசிய கருத்துரைகளும் அந்தச் சின்ன முயலின் உள்ளத்தைக் கவர்ந்து விட்டன.

அந்த அமைச்சர்களைப் பார்க்கப் பார்க்க தானும் ஓர் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை அந்த முயலின் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. சிங்க அரசரின் பக்கத்தில் ஓர் அமைச்சராக வீற்றிருந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று அது நினைத்துப் பார்த்தது.