பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




1. காலங்கடந்த நாடு


கிழக்கு கீழ் நிலம், தாழ் நிலம் - கோ தாவரியும் கருணையும், காவிரியும் பொருநையும், பாலாறும் வைகையும் வங்கக் கடல் சென்று விழும் திசை ! மேற்கில் மேலே, வானோக்கி உயர்ந்த மேலை மலைத் தொடரளாவி அது கடந்து அரபிக்கடல்வரை அது பரந்திருந்தது. வடக்கு வண்மையுடன் விந்த மலைக் காடுகளும் கடத்தற்கரும் மேட்டு நிலங்களும் உடைய விரிந்த எல்லை! தெற்கு தென்னுதற்கு உதவும் நெம்பு கோல்போல, நுணுகி ஒரு முனையாய்க் குமரியில் சென்று நிற்பது!

மொழியிலே, தமிழ் மொழியில் திசைகளுக்கு அமைந்த சொற்களிலே எல்லை காட்டி, மொழி எல்லையே இன எல்லையாக, இன எல்லையே நாட்டெல்லையாக, நாட்டெல்லையே பண்பாட்டின் அக எல்லையாகக் கொண்ட நானிலம், ஐந்திணை அளாவிய முழுநிலம் பண்டைத் தமிழகம், இன்றைய தென்னாடு-அதுதான் திராவிடம்!

கங்கை சிந்துவெளிகள் நிலவுலகில் தோன்றுவதற்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன், அந்த ஆறுகளும் அவற்றுக்குரிய பிறப்பிடமான இமயமலைத் தொடரும் கடலாக அலைபாய்ந்து கொண்டிருந்த காலத்தில் இன்றைய ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிகா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களே உருவாவதற்குமுன், மனிதனும் மனித நாகரிகமும் முதலில் பிறந்த கன்னி மாநிலம் இது ! இயற்கையின் முதல் நிலவுலகக் குழந்தை, உலகுடன் பிறந்து உலகுடன் வாழும் நிலவுலகமையம், நாகரிகத்தின் பிறப்பிடம், வளர்ப்புப்பண்ணை, சேமகலம் - திராவிடப் பெருங்குடி மக்கள் வாழும் இத்திருவிடமே !

நிலவுலகம் இன்றைய வடிவமடைந்த பின்னும், இன்று உலகில் வாழும் நாடுகள், இனங்கள், மொழிகள் பிறக்குமுன்,