பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 அப்பாத்துரையம் 11

 இழந்து புதுப்பெருமை அடைவதற்கும் முடியாதபடி விடுதலை தவறிக்கெட்டு, பெயரிழந்து பண்பிழந்து கையும், காலும் கட்டப்பட்டு, மயக்க மருந்துக்கும் நச்சுக் குழல்களுக்கும் ஆட்பட்டு நலியும் நிலையில் உள்ள நிலமாகக் காட்சியளிக்கிறது.

வரலாறு அறிந்தவர்கள் வாய்விட்டு அலறக் கூடும். வருங்காலம் அவாவுபவர்கள், உலகவளம் காணத்துடிக்கும் நல்லோர் அங்கலாய்க்கக்கூடும். ஆனால் திராவிடத்தின் இந்நிலை மாறவேண்டுமானால், திராவிட மக்களிடையே இவ்வரலாற்றறிவு, இவ்வருங்கால அவா, உலக அவா எழுப்பப்படுதல் வேண்டும். அவர்கள் தன்னறிவு, தன் இன அறிவு, தன்னம்பிக்கை ஆகியவை பெற்று உலக வாழ்வில் தங்குதடையற்ற தனிப்பங்கு பெற்றாக வேண்டும். அதாவது திராவிடநாட்டை அந்நாட்டுக்கும், மொழிக்கும், அதன் பண்புக்கும் முரண்பட்ட பண்புருவற்ற இந்தியப் பரப்பிலிருந்து பிரித்து, தனி உரிமை நாடாக, விடுதலைப் பெருவாழ்வுக்குரிய நாடாக விளங்க வழி வகுக்க வேண்டும். இவற்றைக் கிளர்ந்தெழுகின்ற மாபேரியக்கமே திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத்தின் புது மலர்ச்சிப் பூந்துணர், திராவிட இனத்தின் மறுமலர்ச்சிக் கொடி! அது தமிழகம் தன்னுரிமை பெற, தமிழினம் அல்லது திராவிடம் தனிவாழ்வும், தனி ஆட்சியும் மேற்கொள்ள, உலக நாகரிகம் வளர்க்கும் உயர் நாட்டினங்களிடையே திராவிடநாடு தனக்குரிய நற்பங்குபெற உழைத்து வருகிறது, மக்களை ஊக்கி வருகிறது!

விழுந்து கிடக்கும் உருவிலாப் பரப்பிலே, அது பகுத்தறிவுக் கண்கொண்டு கண்டு சுட்டிக்காட்டும் பொன்னுருவே திராவிட நாடு. வரலாற்றின் துணைகொண்டு பண்பும் எல்லையும் விளக்கி, உலக நாகரிகத்தின் போக்கினைத் தீட்டிக்காட்டி உரிமை முழக்கமிட்டு, வருங்கால நோக்கி உயிர்ப்பூட்டி அது எழுப்பிவரும் தேசீய ஆர்வத்துக்குரிய நிலைக்களமே திராவிட நாடு .

தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பு இவை உயிர்ப்புடன் நிலவி, தங்கு தடையின்றி வளர்ந்து உலக நாகரிகம் வளர்த்து வந்துள்ள, வளர்க்க இருக்கிற இடமே திராவிட நாடு. இன்று அது இருக்குமிடத்தையே நாம் உலகப்படத்தில் காணமுடியாது. அயலினங்களின் உருவிலாப் பரப்பிலே அது முன்