பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11. கீழ்த்திசை நாகரிக ஒற்றுமை
தென்னகத்தின் நிழலே

'திராவிடநாடு எது, எங்கே' என்ற கேள்வி இவ்வாறாக ஒரு புதிய தேசியம் பற்றிய பழைய தேசியத்தின் கேள்வியல்ல. ஒரு பழம்பெரும் தேசியம்பற்றிய ஒரு புதிய, இன்னும் உருவாகாத, என்றும் உருவாக முடியாத ஒரு போலித் தேசியத்தின் கேள்வியே, யாகும். உண்மையில் கேள்வி கேட்பவர் உள்ளத்தில் நிழலுருவாக ஊசலாடும் போலி ஒற்றுமைக் குறிக்கோள், போலித்தேசியக் குறிக்கோள்கூடத் திராவிட நாட்டின் ஒற்றுமையின் ஒருவிரிந்த நிழலேயன்றி வேறன்று.

இன்று இந்தியாவில் காணப்படும் பரந்த ஒற்றுமைபோன்றதே ஐரோப்பாவின் ஒற்றுமை. அது ஐரோப்பாவின் ஒற்றுமையைவிட மிகக் குறைந்ததே என்று சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி போன்ற அறிஞர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஐரோப்பாவில் காணப்படும் நாகரிக ஒற்றுமையை நாம் முனைப்பாக மேற்கிலும் தெற்கிலும் காண்கிறோம். வரலாற்றில் அது தென்கிழக்கிலிருந்து தென்மேற்கு, மேற்கு வடமேற்காக வலஞ் சுழித்துச் சென்று, மற்ற திசைகளில் பரவுவது காணலாம். அதுபோல, ஒரு கண்டம், ஒரு குட்டி உலகம் என்ற அளவில்கூட இந்தியாவில் (இந்தியக் கூட்டுறவு, பாகிஸ்தான் உட்பட்ட பரப்பில்) காணப்படும் ஒற்றுமை, தெற்கிலும் கிழக்கிலுமே காணப்படுவதாகும். அது வரலாற்றில் தெற்கிலிருந்த தென் கிழக்கு, கிழக்கு, வடகிழக்காக இடஞ்சுழித்துச் செல்வது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே பாரத கண்டத்தின் ஒற்றுமை என்பது, உண்மையில் அதில் ஒழுங்கான தேசியக் கட்டமைப்புடைய உயிர்ப் பகுதியான திராவிட நாட்டின் ஒற்றுமை, திராவிட நாடு கடந்த திராவிடப் பண்பாட்டின் விரிவெல்லை ஆகியவையேயன்றி வேறன்று.