வாழ்க
‘புத்தர் திருவடி பராவுகின்றோம், புத்தம் சரணம் கச்சாமி!
தகைசால் அறவணம் அளாவுகின்றோம் தர்மம் சரணம் கச்சாமி!
அறிவர் கழகம் விராவுகின்றோம்
சங்கம் சரணம் கச்சாமி!
13
பாளி மொழியின் ஒருமை வணக்கம் தமிழின் பன்மை வணக்கத்துடன் நாரிடை மலரென மிடைக்கின்றது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள்! உலகுக்குத் தமிழகம் அளித்த மும்மணிகளாக இவை திகழ்கின்றன.
'வாழ்க' என்னும் சொல்லின் இனிமையுடனும் பொருட் செறிவுடனும், பண்புடனும் ஊடாடும் நம் கண் முன்னே, வருங்கால வானில் தெரியவரும் காட்சிகள் இவை!
கார்ல்மார்க்சு தரும் காட்சி
நம் வாழ்வின் இப் பழம்புகழ், பழம்புகழ் மட்டுமன்று; வெறுங் கலைப்புகழ், அரசியல் வரலாற்றுப் புகழ் மட்டுமல்ல; அவற்றின் சாயல் தமிழ் மக்கள் வாழ்விலும், பீடிலும் நின்று நிலவியுள்ளன! அணிமைவரை, வெள்ளையர் ஆட்சித் தொடக்கம் வரை நின்று நிலவியுள்ளன! இன்றுகூட அங்கு முற்றிலும் மறைந்துவிடவில்லை. உள்ளூர நம் அகத்தே உறைந்து கிடந்து, இன்று விரைந்து கனிவுற்றுப் பொங்கிப் பொதுளத் தொடங்கி யுள்ளது.
வரலாற்றுப் பழம்புகழ், அரசியல் புகழ் ஆகி, தமிழர் வாழ்வில் புகுந்து, அவர்கள் தொழில்கள், வாணிகம், கல்வி, கலை, குடியாட்சி, குடியேற்றங்களை வளர்த்துள்ளன. கடல் கடந்த ஆட்சியாலும், கடல் கடந்த வாணிகத்தாலும் செல்வம் பெருக்க முற்றது. தமிழக ஒண் பொருள்கள் மட்டுமன்றி, தமிழகத் தொழிற் பொருள்களும் கலைப் பொருள்களும் உலகெங்கும் சென்றன - உலகின் செல்வ வளங்கள் யாவற்றையும் தமிழகத்தில் கொண்டு வந்து குவித்தன. ஆங்கில ஆட்சியின் விடியற்போதுவரை தமிழகமே உலகின் கலையூற்றாக, தொழிற் பண்ணையாகச் செல்வக் களஞ்சியமாக, அறிவுக் கருவூலமாக விளங்கிற்று.