வாழ்க
21
உயிருடன் இயங்குதல், மாளாது பிழைத்திருத்தல், மாள்வு தவிர்த்தல்; பிழைப்பு நடத்துதல், வறுமை தவிர்த்தல்; தங்கியிருத்தல், குடியிருத்தல்; (மனைவி அல்லது கணவனுடன் கூடி) இல்லறம் நடத்துதல்; மற்ற மக்கட் குழுவினருடன் கூடி ணங்கி ஒத்தியங்குதல், ஒப்புரவாற்றுதல், சமுதாயத்தில் உறுப்பினனாய் இயங்குதல்; வளர்தல், வளம் பெறுதல், நலம் பெறுதல், பயன் பெறுதல், பலவகைச் செல்வமும் வாய்க்கப் பெறுதல், இன்பம் பெறுதல்; உயர்தல், ஓங்குதல், சீரும் சிறப்பும் புகழும் பெறுதல்; ஆக்கம் பெறல், பெருகல், இனம் பெருக்குதல், மரபு நீட்டித்தல்; நீடித்து நின்று நிலவுதல், என்றும் நின்று நிலவுதல்-இத்தனை பொருள்களையும் சொல்லின் இலக்கிய வழக்கிலும், பேச்சு வழக்கிலும் காணலாம்!
தவிர, தமிழ் மேலோர் கடுஞ்சினத்தில்கூடப் பழிச்சொல் வழங்குவதில்லை. வாழ்த்துச் சொல்லே வழங்கினர். 'வாழி மடநெஞ்சே! வாழ்க கயவர்!' என்ற வழக்குகளை இலக்கியத்தில் காணலாம். 'நாசமற்றுப் போவாய்' 'உனக்கென்ன அவக்கேடு!' என்று தாய் தந்தையர் சுடுமொழிகள் பகர்வதை இன்றும் காண்கிறோம். சீற்றத்திலும் தமிழர் பண்பு உணர்வுத் தளத்தில் தான் சினத்துக்கு இடந் தந்தது; அறிவுத் தளத்தில் அமைதி பேணி, அதை மொழியிலும் பதியவைத்துள்ளது.
மனித நாகரிக வளர்ச்சியுடன் வாழ்தல் என்னும் கருத்து வளர்ந்து வந்துள்ள எல்லாப் பண்புப் படிகளையும் வாழ்தல் என்ற தமிழ்ச் சொல்லின் பொருளே காட்டுவதாய் அமைந்துள்ளது.
உயிருடன் இயங்குவதும், மாள்வு, இடர்களிலிருந்து தப்பிப் பிழைப்பதும் மனிதன் காட்டுநிலை வாழ்க்கைப் பண்பு. பிழைப்பு நடத்துவதும், வறுமை தவிர்த்து வாழ்வதும் இதனினும் மிகுதி உயர்ந்த பண்புகளல்ல. இவற்றை நாடோடி வாழ்க்கைப் பண்புகள்
என்னலாம்.
இதிலிருந்து நாம் படிப்படியாக உயர் பண்புகளுக்கு வருகிறோம். அவ்வகையில் அடுத்தபடியே மனித நாகரிகப் படி ஆகும். அதிலேயே தங்குதல், குடியிருத்தல் என்ற பொருள்கள் மனிதன் நிலையான குடிவாழ்வு தொடங்கிய காலத்துக்கு உரியன. குடும்ப வாழ்விலும் சமுதாய வாழ்விலும் பிறருடன் கூடி