வாழ்க
31
தகை
சான்றோர் சால்புடை வாழ்த்துக்கும் சால்புக்கேடு கண்டவிடத்துக் கொண்ட வெகுளிக்கும் வள்ளுவர்பிரான் சான்ற இலக்கணம் கண்டு கூறியுள்ளார். அவ்விலக்கணங்களில் முந்தியதற்குரிய இலக்கியத்தைச் சங்க இலக்கியத்தில்கூட ஓரளவிலேயே காணலாம். அவ் விலக்கியத்தில் பண்புடைப் புலவர்கள் அறிவுடை வாழ்த்துகள் பல உண்டு. அதற்கியைந்த பண்புடை மன்னரும் இருந்தனர். ஆனால், பொதுவாக அக்கால மன்னரிடம், அதாவது கடைச் சங்ககால மன்னரிடம், வீரம், கொடை முதலிய பண்புகள் மலிந்த அளவுக்குப் பண்பு மலிந்ததாயில்லை என்றே கூறுதல் வேண்டும். பண்பு கெடுக்கும் மரபு இரண்டாயிரம் ஆண்டு படர்ந்தே அவர்கள் தடம் இன்று அழிந்துள்ளது. அவர்கள் இனமரபும் நலிந்துள்ளது. ஆயினும், திருவள்ளுவர் கண்ட சான்றோர் வெகுளியின் இலக்கணத்துக்கு அரியதொரு இலக்கியமாகச் சிலப்பதிகாரம் இன்றும் விளங்குகின்றது. பெண்மையின் நிறைவு கண்ட கண்ணகியின் வானுயர் சீற்றத்தை அத்தகையதொரு தெய்வச் சீற்றமாக்கிக் காட்டுகிறார் இளங்கோ!
வாழ்த்தின் வண்ணம்
ம்
'வாழ்க' என்று சொல்லளவில் கூறுவதால் மட்டும் ஒருவர் வாழ்ந்துவிட முடியாது. 'தாழ்க', 'அழிக' என்று பழிப்பதால் மட்டும் ஒருவர் தாழ்ந்துவிடவும் மாட்டார். வாழ்த்துதல் சொல் கடந்து மனமொழி மெய்கள் மூன்றும் அளாவியதாய் இருந்தால் மட்டுமே பயனுடையதாகும். இவ்வகையில் வாழ்த்துதல் என்பதற்கு உண்மை எதிர்ப்பதம் கிடையாது. சொல்லளவில் எதிர்ப்பதங்கள் வீழ்க, ஒழிக என்பவையே, வாழ்வுக்கு எதிர்ப் பண்புகளையே வீழ்க, ஒழிக என்று கூறுதல் தமிழ் மரபு. இவையும் மன மொழி மெய் அளாவிக் கூறப்படுவனவே. இரண்டிலும் உட்பொருள் வாழ்வு நோக்கியதேயாகும்.
'வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்! வீழ்க தண்புனல்! வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே சூழ்க. வையகமும் துயர் தீர்கவே!