பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தமிழ் வளர்ச்சியும் தமிழரின் இயக்கமும்

தமிழ், தமிழர், தமிழினம் என்ற குரல்கள் தமிழ் நாட்டிலெழுந்து முப்பது, நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இவற்றுள் முதல் குரலும் முதன்மையான குரலும் தமிழ்க் குரலே. ஆனால், இக் குரல் முதல் முதலாக எழுந்தது 'தமிழ் நாடு' என்று குறிப்பிடும் 'குண கடல், குமரி, குடகம், வேங்கடம்' எனும் நான்கொல்லையுட்பட்ட இந்தியத் துணைக்கண்டப் பகுதியாகிய தமிழ் நாட்டிலன்று! துணைக் கண்டத்திலிருந்து கடற்காலினால் பிரிக்கப்பட்ட பழந்தமிழ்த் தாயகத்தின் பகுதியான இலங்கை அல்லது ஈழநாட்டு யாழ்ப்பாணத் தமிழரிடையேதான் அக் குரல் எழுந்தது. அது மலேயா, பர்மா, தென் ஆப்பிரிக்கத் தமிழகம், மொரிசியசு, பிஜி, ஜமெய்க்கா, கயானா முதலிய தமிழுலகப் பகுதியெங்கும் பரவிப் பெரும் பான்மைத் தமிழர் வாழும் தமிழ் நாட்டிலும் புத்துணர்ச்சி யூட்டிற்று. கடல் கடந்த தமிழகம் தந்த இத் தமிழியக்கத்துக்குத் தமிழ்நாடே தலைமை வகித்து வழிகாட்ட வேண்டுமென்று தமிழுலகம் எதிர்பார்ப்பது இயல்பே யன்றோ? இவ்விருப்பம் இன்று நிறைவேறி வருகிறது என்பதில் தடையில்லை. தமிழ்க் குரலால் எழுப்பப் பெற்ற தமிழியக்கம் தமிழ்நாட்டில் இன்று தமிழரியக்கமாய், தமிழின (திராவிட) இயக்கமாய் வளர்ந்து வருகிறது.

தமிழர் குரல் தமிழியக்கமாக, அதாவது மொழியியக்கமாக நிலைபெற்றால் போதும் என்று விரும்புபவர் உண்டு. அது று தமிழரியக்கமாக, அதாவது அரசியலியக்கமாக அமைந்து விட்டால்போதும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆயினும் அது படிப்படியாக தேசிய இயக்கமாகவும், இன நாகரிக இயக்க மாகவும், இனக்கலை இயக்கமாகவும், வளர்ந்துகொண்டு வருகிறது. இவ் வளர்ச்சியைக் காரணகாரியத் தொடர்புடன் மரபு வழியில் நின்று உணராதவர், தமிழ் நாட்டையோ தமிழ்ப்