அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே!
அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி
அடங்கியதே!
தப்பாய்த் தவறாய்த் தமக்காய்ப் படிக்கும் தரகரிடை உப்பாய் உணவாய் உடம்பாய்த் தமிழை உயிர்த்திருந்து, ‘முப்பால் ஒளி'யாய் முகிழ்த்து 'மணிவிளக்' காய்எரிந்த அப்பாத் துரையார் எனும்அறி வாட்சி அடங்கியதே! ஒப்பாய்த் தமிழ்கற்(று) உரைவிற்(று) உயிர்வாழ உடல்களிடை மப்பாய்த் திரண்டு மழையாய்ப் பொழிந்து தமிழ்வளர்த்துக் கொப்பாய்க் கிளையாய் மலராய்க் கனியாய்க் குலம்புரந்த அப்பாத் துரையார் எனும்தமிழ் மூச்சிங் கொடுங்கியதே! செப்போ இரும்போ மரமோ மணலோ எதுதரினும் எப்போ திருந்தமிழ் மாறி உயிர்வாழ் இழிஞரிடை முப்போ திலுந்தமிழ் ஆய்ந்தே களைத்த மொழிப்புலவர் அப்பாத் துரையார் எனும்மூ தறிவும் அயர்ந்ததுவே!
ஒருமொழிப் புலமை உறற்கே வாணாள் ஒழியுமெனில், இருமொழி யன்று, பன் மூன்று மொழிகள் இருந்தகழ்ந்தே திருமொழி எனநந் தீந்தமிழ்த் தாயைத் தெரிந்துயர்த்திக் கருவிழி போலும் கருதிய கண்ணும் கவிழ்ந்ததுவே!
குமரி ஆரல்வாய் குமிழ்த்தமுத் தம்மைக்குக் காசிநாதர் திமிரிப் பயந்த அப்பாத்துரை என்னும் திருவளர்ந்து நிமிர்த்துத் தமிழ்மொழி நீணில மெங்கும் நிலைப்படுத்தும் அமரிற் படுத்திங் கயர்ந்ததே ஆரினி ஆந்துணையே! செந்தமிழ் ஆங்கிலம் இந்தி பிரெஞ்சு செருமனுடன் வந்தச மற்கிரு தம்ருசி யம்சப்பான் என்றயல்சார் முந்துபன் மூன்று மொழிபயின் றேபன் மொழிப்புலமை வெந்து நீறானதே, தாய்ப்புலம் விம்ம வெறுமையுற்றே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கனிச்சாறு 7
தமிழ்மண் பதிப்பகம்
2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.
618 GÖTGOT-600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி
- 9444410654