பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

55

தோற்றத்தில் ஒருசிறிதும் அக்கறை காட்டாமல், வீட்டு வேலைகளில் முழுக்க ஈடுபட்டு உழைக்கும் சமயம், அவிழ்ந்து சோர்ந்த கூந்தலைத் தாறுமாறாக எடுத்துச் செருகிக் கொண்டு அருவருப்பான தோற்றமளிப்பாள்.

'மேலும் வெளியுலகில் சுற்றித் திரியும் கணவன் அங்கங்கே பல செய்திகளைக் காணவும் கேட்கவும் வழியுண்டு. அவற்றை அவன் அயலாருடன் பேசி வாதிக்க முடியாது. இந்நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் தன் மறுபாதியாகப் பழகிவிட்ட ஒரு துணைவியுடன் அவை பற்றி உரையாட விரும்பாமல் இருக்க மாட்டான். ஒத்துணர்வுடனும் ஒத்த அறிவுடனும் அதை ஆர்வத்துடன் செவியேற்று அதில் அவன் ஈடுபட்டு மகிழும்போது உடனிருந்து மகிழ்ந்தும், வருந்தும் போது உடனிருந்து வருந்தியும் ஒரு துணைவி அளிக்கும் துணைமை பெரிது. மற்றும் சில சமயம் ஏதேனும் அரசியல் நிகழ்ச்சிகள் கணவன் உள்ளத்தின் அமைதியைக் குலைக்கவோ அல்லது அவன் உவகை உணர்வைத் தூண்டவோ செய்யலாம்: அதைத் தனியிடத்திலிருந்து கொண்டே நம்பகமான ஒரு துணை உள்ளத்தினிடம் வெளியிடும் ஆர்வம் அவனுக்கு இருப்பது இயல்பு. சிற்சில சமயம் அவன் உள்ளூர இவற்றுள் எதையேனும் கருத்துட் கொண்டு தனக்குள்ளாக நகையாடவோ அல்லது பெருமூச்சு விடவோ இடமேற்படும். இத்தகையவற்றை வெளியிட்டுக் கூறி அமைதியும், அதே சமயம் வெளியுலகுக்குச் செல்லவிடா தடக்கிப் பாதுகாப்புறுதியும் தரத்தக்கவள் துணைவியே. ஆனால் குடும்ப நலஆர்வ மட்டுமே மிகுதியுடைய மேற்குறிப்பிட்ட வாழ்க்கைத் துணைவி அச்சமயம் இவற்றில் அக்கறை கொள்ள மாட்டாள். உணர்ச்சியற்ற தொனியுடன் “என்ன செய்தி அப்படி!” என்று அசட்டையாகக் கேட்டு, அவள் அவன் ஆர்வத்தின் மீது தண்ணீரைக் கொட்டி விடுவாள்!

'இது மிகவும் மன வருத்தத்துக்குரிய செய்தி ஆகும்.'

உமா நோ கமி இதுபோன்ற இன்னும் பலவகை மாதிரிகளை எடுத்து எடுத்து ஆய்வாராய்வுகளில் ஈடுபட்டான். ஆனால், அத்தனைக்குப் பின்னும் அவனால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை.

நீண்ட பெருமூச்சுடன் அவன் மேலும் தொடர்ந்தான்.