பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 22

தோல்விகளையும் மட்டும் ஒரு சிறிது பொறுத்துக் கொள் வதானால், அதுபற்றி நான் கவலைப்படமாட்டேன். உலகில் உயர்படிக்கு நீங்கள் வரும்வரை அந்நிலையில் என்னால் காத்திருக்கமுடியும்" என்று அவள் விளக்கம் உரைத்தாள். ஆனால், அவள் அடுத்த வாசகத்தின் தொனி மாறுபட்ட உணர்ச்சி காட்டிற்று. அது அவள் முடிவையும் வேறுபடுத்திற்று. "இருந்தாலும் நீங்கள் மதிப்பாக நடப்பதற்கு என்றேனும் ஒருநாள்தான் கற்றுக் கொள்வதானால், அதுவரை உங்கள் கடுஞ் சொற்களை ஒவ்வொரு நாளும் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, நாம் இருவரும் இருவேறு பாதையாகப் பிரிந்து செல்லும் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் கூறுவது போல நானும் ஏற்றுக் கொள்ளுகிறேன்” என்றாள் அவள்,

'இதனையடுத்து அவளது பழைய பொறுப்பற்ற கோபா வேசம் திடுமென எழுந்தது. அவள் என் மீது மிகக் கடுமையான வசைமாரிகளை வீசினாள். பெண்களுக்கு இயல்பான காட்டுமிராண்டித் தனத்துடன் அவள் எதிர்பாராமல் என் சுண்டு விரலைப் பற்றி இழுத்து நெறுநெறு வென்று கடித்தாள், அவள் பற்கள் ஆழமாகப் பதிந்து காயம்பட்டது. வேதனை மிகப் பெரிதாய் இருந்தாலும் நான் அதை அடக்கிக் கொண்டு துயரார்ந்த குரலில் என் முடிவை எடுத்துரைத்தேன்.

'நாகரிக சமுதாயத்தில் என் மதிப்பு இனி உயர முடியாதபடி நீயே தடை செய்துவிட்டாய். என் மீது நீ இப்போது இட்ட தழும்புகளால் நான் இனி மிகத் தாழ்ந்த பணிகளுக்குக் கூடத் தகுதியற்றவனாய் விட்டேன். உயர்ந்தோர் குழாத்தில் நான் இனி தலை காட்டவும் முடியாது. உலக வாழ்விலிருந்தே ஒருங்கித் தான் காலங்கழிக்க வேண்டும். இது எப்படியானாலும், உனக்கும் எனக்கும் உள்ள உறவு இனி நீடிக்கப் போவதில்லை. இனி நாம் ஒருவரை ஒருவர் பார்க்கப் போவதில்லை" என்று கூறி வெளியேறினேன்.

'வெளியேறும் சமயம் நான் என் ஊறுபட்ட விரலைத் கையில் பற்றிப் பிடித்தபடியே கீழ்வரும் பாடலைப் பாடினேன்.'