தாயகத்தின் அழைப்பு
7
பொருள்போலத் தோற்றினாலும், அது சிறிது சிறிதாக அசைவதும், நகர்வதும் தெரிந்தது. அவ்வசைவு அது ஒரு மனித உரு என்றும், அசைவின் குழைவுநெளிவு அது ஓரிளம்பெண் என்றும் காட்டின. அவ்வடிவம் விரைவில் குவட்டின் கீழ்பால் இறங்கிச் சென்றது. அதேசமயம் வேறு பல நிழலுருக்கள் தலையில் ஏதோ தாங்கிய வண்ணம் குவட்டின் மேற்புறம் சென்றன. பின் ஒன்றன் பின் ஒன்றாக ஏறிச் சென்றன. தலையின் சுமடுகள் புதர்க்கட்டுகள் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. மாடத்தின் உச்சியில் விரைவில் ஒரு சிற்றொளி எழுந்து பேரொளியாகப் படிப்படியாக அழல் வீசத்தொடங்கிற்று.
மாடம் அருகேதான் இருந்தது. நங்கை இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். குதிரைகள் இன்னும் உணக்கற் புல்லைக் கறித்துக்கொண்டுதான் இருந்தன. காவிக்காரன் வழிவினவும் எண்ணத்துடன் அவற்றை அப்படியே விட்டுவிட்டு எழுந்து மாடத்தை நோக்கிப் புறப்பட்டான்.
மாடத்தின் உச்சியெல்லாம் இப்போது செந்தீ வண்ணமாய் தெரிந்தது. சுடர்ப்பொறிகள் தெறித்தெழுந்து வானவெளியைச் சென்று முத்தமிட்டு மாய்ந்தன. கூளிகளும் குறளிகளும் போலத் தெரிந்த ஆண்பெண் குழந்தை நிழல் வடிவங்கள் அழலொளியை மாறிமாறி மறைந்த வண்ணம் சுற்றிக் கூத்தாடின. கூத்துக்குரிய குரவைப் பாட்டும் அதன் சந்தத்துக்குரிய கைகொட்டோசையும் இருளில் மிதந்து காவிக்காரன் செவிகளில் தெளிவாகக் கேட்டன.
தன்னதா னா தனனா
தன்ன தானா!
தன்னானா தன்னதன்
தான தன்னா!
“மந்திரிமா ரே வருவீர்"
என்றான் மன்னன்
வந்தார்கள் ஒன்று, இரண்டு
மூன்று - பேர்கள்.
“தந்திரியா ரே வருவீர் அரசி மாடம்
(தன்னதா)