பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

|| 217

எச்சரித்துவிட்டு, எங்களை மாற்றுப் பெயருடன் காத்து வாழ வைப்பதாகக் கூறி இட்டுச் சென்றனர்.

“அந்தக் கொலைகாரர்கள் எங்களுடன் படகில் தப்பி வந்து விட்டார்கள். பெற்றோர்கள் என்ன ஆனார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், கொலைகாரர்கள் கொலைக்குரிய பணம் வாங்கிய பின் உண்மையிலேயே திருந்தி விட்டார்கள். நாங்கள் யார் என்று கூறினால் உயிருக்கு இடர் ஏற்படும் என்று எச்சரித்து, எங்களைத் தங்கள் பிள்ளைகளாகவே வளர்த்து வருகிறார்கள். இப்போது அவர்கள்தாம் எனக்கும் தங்கைக்கும் பெற்றோர்.

இங்கே வந்தபின் எங்கள் உடன் பிறந்தார்களைப் பற்றி எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களும் இறந்து போய் இருப்பார்களென்றே இதுவரை நானும் தங்கையும் எண்ணியிருக்கிறோம். நீங்கள் வெண்ணிலா என்று என்னைப் பார்த்து உரைத்தபோது, என் வாழ்வில் புத்தமுதம் ஊட்டினீர்கள். வண்ணிலாவுக்கும் முத்தொளிக்கும் மட்டுமல்ல, எனக்கும் தென்றலுக்கும்கூட நீங்கள் தான் ஒப்பற்ற உயிர் அண்ணா! வாருங்கள்; தென்றலையும் தன் தாய் தந்தையரையும் வந்து பாருங்கள்” என்றழைத்தாள்.

“தற்போது உங்கள் தாய் தந்தையரிடம் எதுவும் சொல்ல வேண்டாம். தென்றலுக்குப் பக்குவமாக வேண்டிய அளவு கூறு. சில நாளில் நான் வந்து மேலே வேண்டியது கூறுகிறேன்” என்று கூறித் தென்னவன் மீண்டான்.

பொன்முடியிடம் தென்னவன் குழந்தை ஆவிகளின் அனுபவம் முதல் புதிய தங்கையர்வரை யாவும் கூறினான். அவன் அறிவுரை கோரினான்.

பொன்முடிக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடும் என்று தென்னவன் நினைத்ததில்லை. ஆனால், தென்னவன் பேச்சிடையே பொன்முடி பெருமூச்சு விட்டான். கண் கலங்கினான். இறுதியில் ஆறாகக் கண்ணீர் பெருக்கித் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.

தென்னவன் திகைத்துத் தன்னாலியன்ற மட்டும் அவனைத் தேற்றினான். “இப்படி நண்பன் அழுதால் நான் என்ன செய்ய