பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
244 ||

அப்பாத்துரையம் - 33



உங்கள் உயிரைப் பலியிட்டால், உங்களுக்காக நானும் என் நலனைக் கெடுத்துக் கொள்ளமுடியும்; உயிரைப் பலியிட முடியும் என்று காட்டுகிறேன்” என்றாள்.

“நீ எனக்காக எதுவும் செய்வாய் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஓருயிரல்ல, ஒன்பது உயிர் கொடுத்தாலும் போன என் அமைதி திரும்ப வரமுடியுமா? ஆகவே, முடியாத காரியத்துக்காக மனம் கலங்காமல், முடிகின்ற காரியங்களில் கருத்துச் செலுத்து. எனக்கு இறுதியமைதி தரமுடியா விட்டாலும், அதுவரை நீ இன்பமாயிருப்பதை நான் காணும் அமைதியையாவது நீ எனக்குத் தரலாமல்லவா?” என்றான் அவன்.

“முடியாது என்ற சொல்லை என்னிடம் சொல்லாதீர்கள். ஒரு பெண் நினைத்தால் - கோக்குவா திட்டமிட்டால்-ஆகாதது எதுவுமில்லை. பெண்ணின் காதல் - கோக்குவாவின் காதல் - என்ன செய்யும் என்பதை நீங்கள் இனித்தான் காண்பீர்கள். ஆடவர் அறிவு கடந்து, காதல் கனிந்த பெண்ணின் அறிவுக் கண்கள் அறியவல்லன.”

“சரி, நீ என்ன செய்வாய், பார்க்கலாம்!”

“பார்ப்பதென்ன, இதோ ஒரு காசு, ஒரு காசு என்று நீங்கள் கைகட்டிக்கொண்டு அழுகிறீர்கள். அமெரிக்கக் கொடியின் ஆட்சியில் ஒரு காசைவிடக் குறைந்த தொகை இல்லைதான், ஆனால், அமெரிக்காவை விட்டால் வேறு உலகமே இல்லையா? நீங்கள் கவலையில் சிந்தனையை இழந்துவிட்டீர்கள். பிரிட்டனுக்குச் சென்றால் சல்லி என்று ஒரு சிறு பணம் இருக்கிறது. ஒரு காசுக்கு இரண்டு சல்லி மாற்றலாம். இன்னும் அப்பால் சென்றால் ஃபிரான்ஃசு இருக்கிறது. அங்கே சிறுகாசு என்று ஒரு பணம் இருக்கிறது. நம் காசுக்கு அதில் ஐந்து கிடைக்கும். எழுங்கள், புறப்படுங்கள், போகலாம். ஃபிரஞ்சுக்கொடி பறக்கும் தாகிதி தீவுக்குச் சென்றால், அங்கே உங்கள் காசு கடந்து நாலு சிறு காசு, மூன்று சிறு காசு, இரண்டு சிறு காசு, ஒரு சிறு காசு என்று நான்கு கைம்மாற்றுப் பண்ண இன்னும் இடமிருக்கிறது. விற்பனைக்குத் தூண்ட நாம் ஒருவருக்கு இருவர் இருக்கிறோம். எழுங்கள், புறப்படுங்கள். கோக்குவாவைக் கட்டினவன் கைகட்டிகொண்டு அழத் தேவையில்லை,” என்றாள்.