பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
248 ||

அப்பாத்துரையம் - 33



தன்மறுப்புக்கும் தான் சரி நிகரான கைம்மாறு செய்து கடனாற்றி விட்ட அமைதியே அது.

புட்டியை ஆவலாக வந்து வாங்கிக்கொண்ட கிழவனைப் பற்றிக் கீவ் அடிக்கடிப் பேசுவான். கிழவனின் அறியாமையை அச்சமயங்களில் அவன் குத்திக் கேலி செய்யாதிருப்பதில்லை. முட்டாள் அறிவில்லாமல் தன் வினையைத் தானே வாங்கிக் கொண்டு ஓடினான். அவனுக்கு இருப்பதோ ஒன்றிரண்டு மாதம், அதற்குள் எங்கே யார் அதை இரண்டு சிறுகாசு கொடுத்து வாங்கப் போகிறார்கள். அவனைப்போன்ற இன்னொரு முட்டாள் இந்த தாகிதித்தீவு முழுவதும் தேடினாலும் கிடையாதே! என்று கூறிய வண்ணம் கவலையற்ற உள்ளத்துடன் கீவ் கலகலவென்று நகைப்பான்.

கணவனின் இரக்கமற்ற கேலி கோக்குவாவின் காதலுள்ளத்தை அறுத்தது. அவள் கிழவன் மீது பரிவு கொண்டு பேசினாள். தான் விடுதலை பெற்றதுபற்றி மகிழ்வதற்கு மாறாக, அதற்கு உதவிய கிழவனிடமே பரிவு காட்டுகிறாளே என்று கீவ் புழுங்கினான்.

கோக்குவா இப்போது தன் கடமையைச் செய்துவிட்டாள். ஆனால், புட்டியை அவள் தானே வைத்து அழிய விரும்பவில்லை. மூன்று சிறு காசுக்குக் கீழ் இன்னும் இரண்டு கை மாற, இடமிருந்தது. ஆகவே, இரு சிறு காசுகள் தந்து அதை யாராவது வாங்கிக் கொள்ளக் கூடும் என்று கருதியிருந்தாள். ஆனால், மனைவி நிலை அறியாத கணவன் திட்டம் இதற்குக் குறுக்கே சென்றது. தாகிதித்தீவு வந்த காரியம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் முடிந்துவிட்டதால், இனி ஹவாய்க்குப் போக அவன் படபடத்தான்.

அவளுக்கு வந்த மனக்கசப்பில், ஹவாய்க்குச் செல்லுவதற்கு முன் இருந்த ஓரிரு வாரத்தைக் கூட அவள் தனக்காகப் பயன்படுத்த மனமில்லாமல், வீட்டுக்குள்ளாகவே அடைபடுக் கிடந்தாள். முன் காதலுக்காகத் தன் எதிர்காலத்தை இழந்த கீவின் இன்ப வாழ்வில் இப்போது அவளும் முழுதும் கலக்கமுடியாமல் குமுறினாள்.